search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கூட்டம் குறைந்தது: பணத்தட்டுப்பாடு நீடிப்பு
    X

    பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கூட்டம் குறைந்தது: பணத்தட்டுப்பாடு நீடிப்பு

    வங்கிகளுக்கு பழைய நோட்டுகளை மாற்ற தற்போது யாரும் வருவதில்லை. ஆனால் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நீடிக்கிறது.
    சென்னை:

    பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ந் தேதி அறிவித்தது. கருப்பு பணத்தை ஒழிக்க எடுத்த இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் 50 நாட்களாக அவதிப்பட்டு வருகிறார்கள்.

    பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் நாளை மறுநாளுடன் (30-ந் தேதி) முடிகிறது. பொதுமக்கள் தங்களிடம் வைத்துள்ள பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் 30-ந் தேதி பிற்பகல் வரை வங்கிகளில் ஏற்றுக் கொள்ளப்படும்.

    அதன் பிறகு பழைய நோட்டுகள் செல்லாதவைகளாக முழுமையாக நிராகரிக்கப்படும். பழைய நோட்டுகள் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் அளவிற்கு புதிய ரூ. 2000, ரூ. 500 நோட்டுகள் வினியோகிக்கப்படாததால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன.

    வங்கிகளிலும் ஏ.டி.எம். மையங்களிலும் தேவையான அளவு பணம் வினியோகிக்கப்படாததால் மக்கள் அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

    ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகளுக்கு மிக குறைந்த அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கேட்ட தொகையை கொடுக்க முடியாமல் வங்கி அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக திணறி வருகிறார்கள். பணத்தட்டுப்பாடு படிப்படியாக சீராகும் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால் இதுவரையில் பணத்தட்டுப்பாடு சீராகவில்லை. பணம் வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருவதால் தேவையான அளவு பணம் பெற முடியவில்லை.

    சேமிப்பு கணக்கு வைத்துள்ள ஏழை மக்கள் பாதிக்கப்படாத வகையில் வங்கிக்கு வரும் பணத்தை சிறிய தொகையாக பிரித்து தினமும் வழங்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு ரூ. 24 ஆயிரம் வரை பெறலாம் என்ற கட்டுப்பாடு இருந்த போதிலும் அதனை நாள் தோறும் வங்கிக்கு அலைந்து திரிந்து காத்துகிடந்து பெறுகின்ற நிலைதான் உள்ளது.

    நடப்பு கணக்கு வைத்துள்ள வியாபாரிகள், தொழில் நிறுவனம் நடத்துபவர்கள்ரூ. 50 ஆயிரம் வரை பெற முடியும் என்றாலும் பணத்தட்டுப்பாடால் குறைந்த அளவு தொகையே வழங்கப்படுகிறது.

    இதனால் வர்த்தக பிரமுகர்கள் ரொக்க பண பரிமாற்றங்களை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் கடந்தசில நாட்களாக வங்கிகளின் ஏ.டி.எம்.களிலும் கூட்டம் குறைந்து வருகிறது. பொது மக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி விட்டதால் வங்கியில்களில் நீண்ட வரிசை காணப்படுவது இல்லை. வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க மட்டுமே காத்து நிற்கிறார்கள்.

    பழைய நோட்டுகளை மாற்ற தற்போது யாரும் வருவதில்லை. ஆனால் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு நீடிக்கிறது. இன்னும் ரூ. 5 லட்சம் , 10லட்சம் என்ற குறைந்த அளவில் தான் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ள மக்கள் ரொக்க பண பரிமாற்றத்தில் இருந்து மெல்ல மெல்ல மின்னணு பரிவர்த்தனைக்கு மாறி வருகிறார்கள். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற பண அட்டைகளை பயன்படுத்தி தேவைகளை சந்திக்கிறார்கள்.

    ரொக்க பணபரிவர்த்தனை குறைந்து வியாபாரமும் பாதிக்கப்படுவதால் சிறு தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்களும் ‘ஸ்வைப்’ மி‌ஷனுக்கு மாறி வருகிறார்கள். ஒரு சில மாதங்களில் ஒட்டுமொத்தமாக அனைத்து பண நடவடிக்கையும் வங்கிகள் மூலமே நடைபெறும் என்பது உறுதி.
    Next Story
    ×