search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுனாமி நினைவு தினம்: கடலூர் கடலில் பால் ஊற்றி மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி
    X

    சுனாமி நினைவு தினம்: கடலூர் கடலில் பால் ஊற்றி மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி

    சுனாமி நினைவு தினமான இன்று கடலூர் கடலில் பால் ஊற்றி மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். கடற்கரையோரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மீனவர்கள், பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    கடலூர்:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.

    இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.

    தமிழகத்திலும் சுனாமியின் கோரப்பசிக்கு பலர் இறந்தனர். கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, எம்.ஜி.ஆர்.திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சுனாமி காவு வாங்கியது.

    தேவனாம்பட்டினத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களை கடல் அலை இழுத்து சென்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர்.

    இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுனாமியின் கோரதாண்டவத்தில் 610 பேர் உயிரிழந்தனர்.

    எங்கும் சோகமயமாக காட்சியளித்தது. சுனாமி பேரலை தாக்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தமிழக கடலோரங்களில் அதன் சோகநினைவுகள் இன்றும் அகலவில்லை.

    டிசம்பர் 26-ந் தேதி சுனாமியால் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி அருகே மீனவர்கள் திரண்டனர். அங்கிருந்து அவர்கள் கடற்கரைக்கு மவுன ஊர்வலம் சென்றனர்.

    பூக்கூடைகளையும், பால்குடங்களையும் ஏந்தியபடி சென்றனர். கண்களில் கண்ணீரையும், நெஞ்சத்தில் சோகத்தையும் சுமந்தபடி ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடற்கரைக்கு சென்ற அவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    இறந்தவர்களை நினைத்து பெண்கள் கதறித்துடித்த காட்சி கல் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

    சுனாமியில் பலியான தங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பாலை ஊற்றினர். கூடைகளில் கொண்டுவந்த பூக்களை கடலில் தூவினர்.

    பின்னர் கடற்கரையில் 5 நிமிடம் மவுனமாக அமர்ந்து இருந்தனர். சுனாமியில் பலியான தங்களது குடும்பத்தினரை நினைத்து கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.

    இதையடுத்து கடற்கரையில் சுனாமியில் இறந்தவர்களுக்கு நினைவாக உருவாக்கப்பட்ட நினைவுத்தூண் உள்ள பகுதிக்கு சென்று மலர்வளையம் வைத்து கண்ணீர் சிந்தினர்.

    மீனவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர் உள்பட ஏராளமானோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடற்கரை பகுதிகளில் எங்கும் அழுகை குரல் கேட்ட வண்ணம் இருந்தது.

    சுனாமியின்போது காரைக்கால் கடற்கரையோரம் வசித்தவர்களும் ராட்சத அலையில் சிக்கி பலியானார்கள். அவர்களின் நினைவாக கடற்கரையில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் புதுவை நிர்வாகம் சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும்.

    சுனாமி நினைவு தினமான இன்று புதுவை வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து சுனாமியின் போது இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நண்டலாறு, பட்டினச்சேரி பகுதியில் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் கதறி துடித்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    Next Story
    ×