என் மலர்
செய்திகள்

தஞ்சையில் வேன் மோதி வியாபாரி உள்பட 2 பேர் பலி
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்தவர் அடைக்கலராஜ் (வயது 50) பால் வியாபாரி. இவரும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (47). என்பவரும் நண்பர்கள். நாகராஜ் விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அடைக்கலராஜூம், நாகராஜூம் ஒரு மோட்டார் சைக்கிளில் தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வல்லத்தில் இருந்து மாரியம்மன் கோவில் நோக்கி வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அடைக்கலராஜூம், நாகராஜூம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வேனை ஓட்டி வந்த டிரைவர் கவுரிசங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேர் பலியான தகவல் கிடைத்ததும் அவர்களது குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு சென்று பலியானவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.