என் மலர்
செய்திகள்

குடிநீர் கேட்டு மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி தாலுகாவுக்குட்பட்ட ஆனந்தம் பாளையம் ஊராட்சி குட்டக் காட்டுவலசில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குடி தண்ணீர் வரவில்லை. அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலாவை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா உடனே குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல் ஆனந்தம் பாளையம் ஊராட்சி சிவானந்தா காலனியில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிதண்ணீர் இல்லை என்று கூறி வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து தங்கள்பகுதியில் போதிய குடிநீர் இல்லை என்றும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.






