என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலை அருகே பெண் தலை துண்டித்து படுகொலை: கணவர் வெறிச்செயல்
    X

    விராலிமலை அருகே பெண் தலை துண்டித்து படுகொலை: கணவர் வெறிச்செயல்

    விராலிமலை அருகே பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கத்தலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 60), விவசாயி. இவர்களுக்கு நாகம்மாள்(55), தெய்வானை என்ற 2 மனைவிகள். இருவரும் சகோதரிகள். இதில் நாகம்மாளுக்கு 3 மகன்கள், 2 மகள்களும், தெய்வானைக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நாகம்மாளின் மகன் அய்யருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்துஅவர் தனது மனைவியின் பெயரை ரே‌ஷன் கார்டில் சேர்ப்பதற்காக கருப்பையாவிடம் ரே‌ஷன் கார்டை கேட்டுள்ளார். மேலும் நாகம்மாளும் தனது மகனுக்கு ஆதரவாக பேசி, ரே‌ஷன் கார்டை வழங்குமாறு கூறியுள்ளார். ஆனால் கருப்பையா ரே‌ஷன் கார்டை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவருக்கும், அவரது மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவியுடனும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்றிரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நாகம்மாள் மீது கருப்பையாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இன்று காலை நாகம்மாள் 100 நாள் திட்ட வேலைக்காக வீரம்பட்டி பகுதியில் உள்ள தோட்டம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கருப்பையா, தான் வைத்திருந்த மண்வெட்டியால் நாகம்மாளின் தலையை வெட்டினார். இதில் நாகம்மாளின் தலை துண்டானதோடு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீஸ் டி.எஸ்.பி. தமிழ்செல்வன் மற்றும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கணவனே வெட்டிக்கொன்ற சம்பவம் விராலிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×