என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் கொலை: தலைமறைவான விவசாயியை கைது செய்ய போலீசார் தீவிரம்
    X

    கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியன் கொலை: தலைமறைவான விவசாயியை கைது செய்ய போலீசார் தீவிரம்

    கள்ளக்காதல் விவகாரத்தில் எலக்ட்ரீசியனை கொலை செய்த விவசாயியை போலீசார் தேடி வருகிறார்கள். இந்தகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழநெடும்பூரை சேர்ந்தவர் நெப்போலியன்(வயது 23). எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நெப்போலியன் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அங்குள்ள மின்மோட்டார் கொட்டகையில் நெப்போலியன் பிணமாக கிடந்தார்.

    இதைபார்த்த பொதுமக்கள் குமராட்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது நெப்போலியன் கொலை குறித்து திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழநெடும் பூரில் நெப்போலியன் வீட்டின் அருகே விவசாயி சண்முகவடிவேலு வசித்து வருகிறார். இவருக்கு அனுசுயா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    சண்முகவடிவேலுவின் வீட்டில் மின்சாரம் பழுது ஏற்பட்டபோது அதை சீர் செய்வதற்காக நெப்போலியன் சென்றார். அப்போது அனுசுயாவுக்கும், நெப்போலியனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த சண்முகவடிவேலு அதிர்ச்சி அடைந்தார்.

    நெப்போலியனையும், அனுசுயாவையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து பழகி வந்தனர்.

    இந்நிலையில் சண்முகவடிவேலு நேற்று மாலை தன் வயலில் உள்ள மின்மோட்டார் பழுதாகி விட்டது. அதை பார்க்க வேண்டும் என்று நெப்போலியனிடம் கூறினார். பின்னர் இருவரும் அங்குள்ள மோட்டார் கொட்டைகைக்கு சென்றனர்.

    இதையடுத்து சண்முக வடிவேலு அங்கிருந்து சென்று விட்டார். நெப்போலியன் மின்மோட்டார் கொட்டைகையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் நெப்போலியனை சண்முகவடிவேலு கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். சண்முகவடிவேலுவை தேடி போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் சண்முகவடிவேல் வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்தகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×