search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடி அருகே மாயமான பெண் கொலை: வடிகால் குழாயில் பிணம் வீச்சு
    X

    மன்னார்குடி அருகே மாயமான பெண் கொலை: வடிகால் குழாயில் பிணம் வீச்சு

    மன்னார்குடி அருகே மாயமான பெண் கொலை செய்யப்பட்டு வடிகால் குழாயில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவைச் சேர்ந்தவர் மணியன் மனைவி பார்வதி (வயது 56). இவர் கடந்த 14-ந் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள பாசன வடிகால் வாய்கால் குழாயில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்த போது ஒரு பெண் பிணமாக கிடப்பது தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்தது. இது பற்றி பரவாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ் பெக்டர் சுப்பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடிகால் குழாயில் உள்ள பெண் பிணம் மாயமான பார்வதியின் உடல் தான் என்று கூறப்படுகிறது. அவர் 15 பவுன் நகை அணிந்திருந்தார். அதை பறிப்பதற்காக மர்ம நபர்கள் கொலை செய்து அவரது பிணத்தை வடிகால் குழாயில் மறைத்து வைத்திருக்கலாம் என்று தெரிகிறது.

    அவரது உடலை மீட்டு சம்பவ இடத்திலேயே பிரேதபரிசோதனை செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பார்வதியின் கணவர் மணியன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு சஞ்சய் காந்தி, சின்னதுரை என்ற 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பார்வதியும் தனியாக வசித்து வந்தார். அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பார்வதி மாயமானது பற்றி அவரது மகன்கள் போலீசில் புகார் செய்யவில்லை. எனவே அவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரவாக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×