search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரணியலில் போலீஸ் நிலையத்தில் இருந்து நள்ளிரவில் கைதி தப்பி ஓட்டம்
    X

    இரணியலில் போலீஸ் நிலையத்தில் இருந்து நள்ளிரவில் கைதி தப்பி ஓட்டம்

    இரணியலில் போலீஸ் நிலையத்தில் இருந்து நள்ளிரவில் கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    இரணியல்:

    வில்லுக்குறி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பாகரன் (வயது 60). விவசாயியான இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று பகல் இவர் தனது பசுமாட்டை அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

    அதன்பிறகு விவசாய வேலையை பார்ப்பதற்காக சென்றுவிட்ட புஷ்பாகரன் மீண்டும் அந்த தோட்டத்திற்கு சென்று தனது பசு மாட்டை தேடினார். ஆனால் அந்த மாடு அந்த தோட்டத்தில் இல்லை. இதனால் அந்த பகுதியில் வேறு எங்காவது மேய்ந்துகொண்டிருக்கலாம் என்று நினைத்து புஷ்பாகரன் பல இடங்களிலும் தேடி அலைந்தார்.

    ஆனால் அவர் எங்கு தேடியும் அவரது பசுமாடு சிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தார். அப்போது அவரது பசு மாட்டை 2 மர்மநபர்கள் ஒரு டெம்போவில் ஏற்றிக் கொண்டு சென்றதை பார்த்தாக சிலர் கூறினார்கள்.

    உடனே புஷ்பாகரன் இதுபற்றி தனது உறவினர்களிடம் கூறினார். தனது பசு மாட்டை திருடிச்சென்றவர்களை மடக்கிப்பிடிக்க முடிவு செய்தார். உறவினர்கள் உதவியுடன் வாகனம் மூலம் அவர் அந்த பகுதி முழுவதும் தனது பசுமாட்டை தேடும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது குலசேகரம் பகுதியில் வைத்து பசு மாட்டை கடத்திய டெம்போவை அவர்கள் பார்த்தனர். உடனே அந்த டெம்போவை விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தனர்.

    அப்போது மாட்டை திருடிச் சென்ற ஒருவர் டெம்போவில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். ஒரு வாலிபர் மட்டும் அவர்கள் பிடியில் சிக்கினார். அவரை இரணியல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். அவரிடம் இரணியல் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது பெயர் ஜெகதீஷ். வடக்கன்குளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஜெகதீசை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணைக்காக அவரை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.

    இந்தநிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து நள்ளிரவில் ஜெகதீஷ் நைசாக தப்பியோடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்கவில்லை. இதைதொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓடியது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து குளச்சல் போலீஸ் டி.எஸ்.பி. வெங்கட்ரமணன் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று இதுபற்றி விசாரணை நடத்தினார். மேலும் தப்பி ஓடிய கைதி ஜெகதீசை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×