என் மலர்
செய்திகள்

சோழிங்கநல்லூரில் 6-வது நாளாக மின்சப்ளை பாதிப்பு: பொது மக்கள் மறியல்-முற்றுகை
திருவான்மியூர்:
காஞ்சீபுரம் மாவட்டத்திலேயே அதிக மழையும் இங்கு தான் பெய்தது. கடந்த 12-ந் தேதி முதல் இப்பகுதியில் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது.
6 நாட்களாகியும் இதுவரை மின்சாரம் வரவில்லை. இந்நிலையில் சோழிங்கநல்லூர் பகுதியைச்சேர்ந்த பொது மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் வழங்கக்கோரி சோழிங்கநல்லூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் பழைய மாமல்லபுரம் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழிங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் முகமதுநாசர் மற்றும் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர்.
சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கடந்த இப்பகுதியில் இதுவரை மின்சாரம், குடிநீர் இல்லை. உடனடியாக மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பழையமாமல்லபுரம் சாலை சோழிங்கநல்லூரில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இரவு சோழிங்கநல்லூர் பகுதியில் ஒரு பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டது.
தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் அருகேயுள்ள சதானந்தபுரம், ஆலப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6-வது நாளாக இன்றும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மேலும் தண்ணீர் சப்ளையும் அங்கு இல்லை. எனவே குழந்தைகள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






