search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    54 இடங்களில் மரக்கழிவுகளை கொட்டுவதற்கு மாநகராட்சி ஏற்பாடு: கமிஷனர் நடவடிக்கை
    X

    54 இடங்களில் மரக்கழிவுகளை கொட்டுவதற்கு மாநகராட்சி ஏற்பாடு: கமிஷனர் நடவடிக்கை

    சாலையோரம் மரக்கழிவுகள் கொட்டப்படுவதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தனியார்கள் 54 இடங்களில் மரக்கழிவுகளை கொட்டுவதற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது
    சென்னை:

    சாலையோரம் மரக்கழிவுகள் கொட்டப்படுவதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தனியார்கள் 54 இடங்களில் மரக்கழிவுகளை கொட்டுவதற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளதாக கமிஷனர் தா.கார்த்திகேயன் கூறி உள்ளார்.

    இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், வார்தா புயலின் தாக்கத்தினால் சாலை மற்றும் பொது இடங்களில் விழுந்த, சேதமடைந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மரங்கள் மற்றும் மரக்கிளைகளை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்வதனால் ஏற்படும் காலவிரயத்தினை தடுப்பதற்காகவும், விரைந்து மீட்புப் பணி நடைபெறுவதற்காகவும், தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளுக்குள் தற்காலிகமாக 54 காலி இடங்கள் கண்டறியப்பட்டு, சாலைகள் மற்றும் பொது இடங்களிலிருந்து சேகரிக்கப்படும் மரக்கழிவுகள் இவ்விடங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

    மேலும், சாலைகள், குடியிருப்பு பகுதிகளிலிருந்து மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முழுவதுமாக அகற்றப்பட்ட பின் சேகரிக்கப்பட்ட மரங்கள் மற்றும் மரக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீதமுள்ள கழிவுகளை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தற்போது உட்புறச்சாலைகளில் விழுந்த, சேதமடைந்த மரங்கள் பல்வேறு இடங்களில் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், குடியிருப்பு, வணிக வளாகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் இதர பகுதிகளில் விழுந்த, சேதமடைந்த மரக்கழிவுகள் மீண்டும் சாலையோரங்களில் கொட்டப்படுவதால், ஏற்கனவே சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சிரமங்கள் ஏற்படுகிறது.

    இதன் காரணமாக, தனியார்கள் தங்களது வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் விழுந்த, சேதமடைந்த மரங்களை மட்டும் கொண்டு சென்று கொட்டிட 54 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×