search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கராபுரம் அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டில் கொள்ளை முயற்சி - 2 பேர் கைது
    X

    சங்கராபுரம் அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டில் கொள்ளை முயற்சி - 2 பேர் கைது

    சங்கராபுரம் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை கைது செய்து போலி துப்பாக்கி மற்றும் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சங்கராபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகண்டை கூட்ரோட்டை அடுத்த அரியலூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

    இவர் நேற்று மாலை 3 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் அவரது வீட்டிற்கு 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்கள் தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்தனர். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்டனர்.

    அதற்கு அவர்கள் இது எங்களது உறவினர் வீடு. நாங்கள் திருமண பத்திரிகை கொடுக்க வந்துள்ளோம் என்றனர். இதில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த திருமண பத்திரிகையை வாங்கி பார்த்தனர். அது ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்த பத்திரிகை என்பதை அறிந்தனர்.

    உடனே அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் பொதுமக்களை தாக்க முயன்றனர்.

    அதனை பொருட்படுத்தாத பொதுமக்கள் 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இது தொடர்பாக பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளையர்கள் 2 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம் புலியூரைச் சேர்ந்த செல்வ முருகன் (34), ராஜா (34) என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் வைத்திருந்த வீச்சரிவாள், ஊசி, கையுறை, பிளாஸ்திரி, விலை உயர்ந்த 2 செல்போன்கள், போலி கைத்துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    இவர்கள் வேறு எங்காவது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? அவர்கள் மீது வழக்குகள் ஏதும் உள்ளதா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×