search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்ட கோவிலில் கொள்ளைபோன 4 சிலைகள் மும்பை கண்காட்சியில் மீட்பு
    X

    நெல்லை மாவட்ட கோவிலில் கொள்ளைபோன 4 சிலைகள் மும்பை கண்காட்சியில் மீட்பு

    நெல்லை மாவட்ட கோவிலில் கொள்ளை போன 4 சாமிசிலைகள் மும்பை கண்காட்சியில் மீட்கப்பட்டது. இதையொட்டி மும்பை தொழில் அதிபர் மகனுடன் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    தமிழக கோவில்களில் இருந்து பழம் பெருமை வாய்ந்த கலைநயமிக்க சாமி சிலைகளும், பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகளும் பல ஆண்டுகளாக கொள்ளையடிக்கப்பட்டன. சிலை கடத்தல்களை தடுக்கவும், கடத்தப்பட்ட சிலைகளை மீட்கவும் தமிழக போலீசில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது.

    சிலைகள் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே சர்வதேச கடத்தல்காரன் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டு சிலையில் அடைக்கப்பட்டு இருந்தான். அவனுடன் பெரிய கும்பல் நெட்-ஒர்க் அமைத்து சிலை கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஜ.ஜியாக பொன்மாணிக்கவேல் பொறுப்பு ஏற்றபின்பு கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டார்.

    இதைத்தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் தொழில் அதிபர் தீனதயாளன் தனது வீட்டில் நூற்றுக்கணக்கான சிலைகளை பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வீடு சிற்ப கலைக் கூடம் போல மாற்றப்பட்டு சிறியது முதல் பெரிய சிலைகள் வரை பதுக்கியதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக தீனதயாளனும் அவரது கூட்டாளிகள் 9 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சிலைகள் கடத்தல் தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைத்தது.

    நெல்லை பழவூரில் நாறும்பு நாதர்கோவில் உள்ளது. இது பழங்கால கோவிலாகும். இங்கு சில வருடங்களுக்கு முன்பு 13 சாமிசிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் சுபாஷ்கபூர், தீனதயாளன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் இருவரும் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். அதன் பிறகு இருவரும் தலைமறைவாகி தொடர்ந்து சிலை கடத்தலில் ஈடுபட்டு வந்தனர்.

    அதன்பிறகு சுபாஷ் கபூர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டான். தொடர்ந்து தீனதயாளனும் கூட்டாளிகளுடன் கைதானான். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பழவூரில் கொள்ளை போன 13 சாமி சிலைகளை மீட்கும் பணியில் சிலை கடத்தல் பிரிவு போலீசார் ஜ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    அப்போது 13 சிலைகளும் தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டதும், அங்கிருந்து 4 சிலைகள் மீண்டும் இந்தியாவுக்கே கடத்தப்பட்டு மும்பையில் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து மும்பையில் உள்ள கண்காட்சிகளுக்கு போலீசார் பார்வையாளர்கள் போல் சென்று பழவூர்சாமி சிலைகள் எங்கே வைக்கப்பட்டு இருக்கிறது என்று கண்காணித்தனர். இதில் மும்பையில் ‘இந்தோ- நேபாள் ஆர்ட் சென்டர்’ என்ற அருங்காட்சியகத்தில் பழவூர் கோவில் சாமி சிலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    மும்பையைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் வல்லபபிரகாஷ் (87) அவரது மகன் ஆதித்யா பிரகாஷ் (35) ஆகியோர் இந்த அருங்காட்சியகத்தை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக போலீசார் அதிரடியாக அந்த அருங்காட்சியகத்தை முற்றுகையிட்டு அதில் இருந்த 4 சிலைகளை கைப்பற்றினார்கள். இது தொடர்பாக வல்லப பிரகாஷ் மகன், ஆதித்யாபிரகாஷ் கைது செய்யப்பட்டனர்.

    1959-ம் ஆண்டு முதல் இந்த அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து மீட்கப்பட்ட 4 சிலைகளும், கைதான 2 பேரும் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டனர். இன்று இருவரும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். சிலைகளும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படுகிறது.

    4 சிலைகளில் ஆனந்த நடராஜர் சிலை மட்டும் ரூ. 15 கோடி மதிப்புள்ளதாகும். மற்ற சிலைகளாக காரைக்கால் அம்மையார் சிலை சிவகாமி அம்மாள் சிலை, மாணிக்கவாசகர் சிலை ஆகியவை ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பல வருடங்களுக்கு முன்பு பழவூரில் விலை மதிப்புள்ள சிலைகள் இருப்பதை தெரிந்து கொண்ட சுபாஷ் கபூரும், தீனதயாளனும் இங்கு வந்து வெளிநாட்டைச் சேர்ந்த சிலை வியாபாரிகளுடன் சாமி கும்பிடுவது போல் நோட்டமிட்டனர். அப்போது சிலைகளின் மதிப்பை தெரிந்து கொண்ட அவர்கள் தங்களின் கூட்டாளிகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்ததாக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார்.

    மற்ற சிலைகளை மீட்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
    Next Story
    ×