search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பணம் ஒழிப்பில் தி.மு.க.விற்கு எந்தவித மாறுபாடும் கிடையாது- மு.க.ஸ்டாலின்
    X

    கருப்பு பணம் ஒழிப்பில் தி.மு.க.விற்கு எந்தவித மாறுபாடும் கிடையாது- மு.க.ஸ்டாலின்

    கருப்பு பணம் ஒழிப்பில் தி.மு.க.விற்கு எந்தவித மாறுபாடோ, வேறுபாடோ நிச்சயம் கிடையாது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமணத்தை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று நடத்தி வைத்தார். இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

    சீர்திருத்தத் திருமணங்கள், சுயமரியாதை திருமணங்கள் கேலி, கிண்டல் செய்யப்பட்டு வந்தநிலையில், 1967–க்கு பிறகு தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அறிஞர் அண்ணா வெற்றி பெற்று, தி.மு.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு அந்த நிலை மாறி, சீர்திருத்தத் திருமணங்கள், சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே, தி.மு.க. தலைவர் கருணாநிதி செம்மொழி என்ற அங்கீகாரம் பெற்றுத் தந்த சிறப்புக்குரிய தமிழ் மொழியில், பெருமைக்குரிய திருமணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுவதில் பெருமைப்படுகிறேன்.

    தி.மு.க.வை பொறுத்தவரையில் எந்தவொரு பொறுப்பாக இருந்தாலும் நினைத்த நேரத்தில் யாரும் எளிதில் வந்துவிட முடியாது. இன்றைக்கு நாட்டில் இருக்கும் கட்சிகளை, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை, முதல்–அமைச்சரை பார்க்கும்போது, இவர்களெல்லாம் பதவிக்கு வந்து விடும்போது, வேறு யார் வேண்டுமானாலும் அந்த பதவிக்கு வந்து விடலாம், அதற்கான வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் தி.மு.க.வில் ஒருவர் கட்சிக்காக அயராது பாடுபட்டு, பல தியாகங்களை செய்து, கட்சித் தோழர்களின் உள்ளங்களில் சிறப்புக்குரிய ஒரு இடத்தை பெற்றால்தான், கட்சியின் பொறுப்புக்கு அங்கீகரிக்கக் கூடிய நிலை ஏற்படும். அந்தளவிற்கு உழைத்து, பணியாற்றினால் தான் எந்த பொறுப்பும் கிடைக்கும்.
    மொய் எழுதி விட்டேன்

    இன்றைக்கு நாட்டில் அரசியல் சூழ்நிலைகள் எப்படி இருக்கிறது, நாட்டின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பது உங்களுக்கே தெரியும்.

    கருப்பு பணத்தை ஒழித்திட வேண்டும் என்ற ஒரு திட்டத்தில் தி.மு.க.விற்கு எந்தவித மாறுபாடோ, வேறுபாடோ நிச்சயம் கிடையாது. ஆனால் அதனை ஒழிப்பதில் ஏற்படக்கூடிய சங்கடங்கள், சிரமங்களை தயவு செய்து அனைவரும் சிந்திக்க வேண்டும். பாரதப்பிரதமராக இருக்கக்கூடிய மோடி தேர்தலுக்கு முன்பு, பிரதமர் ஆவதற்கு முன்பு, ‘‘நான் இந்தியாவிற்கு வெளியே இருக்கக்கூடிய கருப்பு பணத்தை மீட்டெடுப்பேன்’’, என்று சொன்னார். அதுமட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் வங்கியில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன் என்றார். யாருடைய வங்கி கணக்கிலாவது 15 லட்சம் வேண்டாம் ஒரு 15 ஆயிரம் ரூபாயாவது அப்படி செய்யப்பட்டு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை.

    அது ஒருபக்கம் இருந்தாலும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில், இங்கு பேசிய மா.சுப்பிரமணியன் விளையாட்டாக, திருமணத்திற்கு மொய் எழுதுவதற்கு கூட யாரிடமும் பணமில்லாத ஒரு நிலை இருந்து கொண்டிருக்கிறது என்றார். ஆனால் என்னை பொறுத்தவரையில் இங்கு மொய் எழுதிவிட்டேன். நான் கொடுத்தது புதிய 2,000 ரூபாய் நோட்டு.
    போராட்டம்

    ஆக, எதற்கு சொல்கிறேன் என்றால் இப்படி ஒரு சூழ் நிலை நிலவுகிறது. இன்றைக்கு வங்கிகளின் முன்னால் மக்கள் வரிசை வரிசையாக நிற்கும் நிலை. தான் போட்டுள்ள பணத்தை எடுக்க இப்படிப்பட்ட அக்கிரமங்களை, கொடுமைகளை, சோதனைகளை சந்திக்கின்ற நிலை வந்துள்ளதை எண்ணிப் பார்க்கின்றபோது, உள்ளபடியே வேதனை ஏற்படுகிறது.

    கருப்பு பணத்திற்கு காரணமாக இருக்கக்கூடியவர்கள் பாதிக்கப்பட்டால் நாம் கவலைப்பட மாட்டோம். ஆனால் இதனால் பாதிக்கப்படுகின்றவர்கள் யார் என்று கேட்டால், கருப்பு பணத்திற்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாதவர்கள், அன்றாடம் காய்ச்சிகளாக, நடுத்தர வருமானம் கொண்ட மக்களாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொருட்களை வாங்கவும் ஆளில்லை, விற்கவும் ஆளில்லை என்ற நிலை வியாபாரிகளிடத்தில் ஏற்பட்டு உள்ளது. ஆக இந்தநிலை இப்படியே போய்க் கொண்டு இருந்தால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடியதை அனைவரும் சிந்திக்க வேண்டும். அதற்காகவே இன்றைக்கு அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து 28–ம் தேதியன்று(இன்று) மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடைபெற இருக்கிறது.
    பரிகாரம்

    இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அரசு இருக்கிறது. அதுபோலவே இந்த மாநிலத்திலும் ஒரு அரசு இருக்கிறது. இந்த திட்டத்தை மத்தியில் உள்ள மோடி அரசு அறிவித்ததும், எல்லா மாநில அரசுகளும் அந்த திட்டத்தை வரவேற்று, அதேநேரத்தில் அதில் உள்ள சங்கடங்களை எல்லாம் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள அரசு பொதுமக்களின் பிரச்சினைகளை பற்றி கவலைப்படுகிறதா, செயல்படுகிறதா என்றால் இல்லை.

    ஆக, இதையெல்லாம் எதற்கு இங்கு சொல்கிறேன் என்றால், இங்கும் ஒரு அரசு இருக்கிறது என்று சொல்கிறோம். ஆனால் நடக்கிறதா, பணியாற்றுகிறதா, செயல்படுகிறதா என்று கேட்டால் இல்லை. ஆக, அரசு முடங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் உள்ள தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் எதிர்காலத்தில் நீங்கள் எல்லாம் நன்றாக சிந்தித்து, ஒரு பரிகாரம் காணக்கூடிய வகையில் சிறப்பான முடிவை எடுக்க இப்போதே தயாராக இருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×