search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வக்கீல்கள் 9 பேர் ஓராண்டுக்கு இடைநீக்கம்: கர்நாடகா பார் கவுன்சில் உத்தரவு
    X

    சென்னை வக்கீல்கள் 9 பேர் ஓராண்டுக்கு இடைநீக்கம்: கர்நாடகா பார் கவுன்சில் உத்தரவு

    பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய 9 வக்கீல்களையும் ஓராண்டுக்கு வக்கீல் தொழிலில் இருந்து இடை நீக்கம் செய்கிறோம் என்று கர்நாடகா பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியின் கோர்ட்டு அறையில் வக்கீல்கள் சிலர் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை நீதிபதி சஞ்சய் கி‌ஷன் கவுல், நீதிபதிசிவஞானம் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர், சென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர்களை கொண்டு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 16-ந்தேதி முதல் ஐகோர்ட்டுக்கு சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

    இந்த பாதுகாப்பு பணியின் போது ஐகோர்ட்டுக்கு வரும் நபர்களை சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ படம் எடுத்தனர். இதில் ஒரு பெண் வக்கீலை படம் எடுத்தபோது பிரச்சினை கிளம்பியது. அங்கிருந்த வக்கீல்கள் சி.ஐ.எஸ்.எப். வீரர்களை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    அப்போது பெண் அதிகாரி ஒருவரை வக்கீல்கள் அசிங்கமாக திட்டியதாக புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட்டு பரிந்துரையின் படி, போராட்டத்தில் ஈடுபட்ட 9 வக்கீல்கள் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்தது.

    போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களை தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்தது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கும் பரிந்துரை செய்தது.

    இந்த விசாரணையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் இருந்த கர்நாடகா பார் கவுன்சிலுக்கு மாற்றம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து 9 வக்கீல்கள் மீதான குற்றச்சாட்டுக்களை கர்நாடகா பார் கவுன்சில் விசாரித்தது. போராட்டத்தின் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிக்களை பார் கவுன்சில் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

    வக்கீல் கெட்ட வார்த்தையால் தன்னை திட்டிய விவரங்களை சி.ஐ.எஸ்.எப். பெண் அதிகாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட கர்நாடகா பார் கவுன்சில் இந்த விசாரணை மீதான தீர்ப்பை நேற்று பிறப்பித்தது.

    பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய 9 வக்கீல்களையும் ஓராண்டுக்கு வக்கீல் தொழிலில் இருந்து இடை நீக்கம் செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் 9 பேரை வக்கீல் தொழிலில் இருந்து ஓராண்டு இடைநீக்கம் செய்து கர்நாடகா பார் கவுன்சில் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    விசாரணையின் போது 9 வக்கீல்கள் தங்களது தரப்பு நியாயத்தை எடுத்து சொல்ல போதிய வாய்ப்பு கொடுக்கவில்லை. அவ்வாறு கொடுத்திருந்தால் 9 பேருக்கும் தண்டனை கிடைத்திருக்காது. கர்நாடகா பார் கவுன்சிலின் இந்த செயல் கண்டனத்துக்குரியது. தற்போது 9 வக்கீல்களின் வாழ்வதாரம் மட்டுமல்ல அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அகில இந்திய பார் கவுன்சிலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு 9 வக்கீல்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×