search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு மாற்றத்தால் மோடிக்கு பொதுமக்கள் ஆதரவு: வைகோ பேட்டி
    X

    ரூபாய் நோட்டு மாற்றத்தால் மோடிக்கு பொதுமக்கள் ஆதரவு: வைகோ பேட்டி

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததால் சாதாரண மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளார் என்று வைகோ கூறினார்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது-

    இந்த நாள் மிக மகிழ்ச்சியான நாள். தமிழர்களின் மானம் காத்த பிரபாகரன் பிறந்த நாள். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ள நூல் வெளியிட்டு விழா ஈரோட்டில் நடக்கிறது.

    இந்த விழாவில் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் எழுதிய விடுதலை முகவரி பிரபாகரன், நெருப்புக்கு பூச்சாண்டி நூல் வெளியிடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள செல்கிறேன்.

    நாடெங்கும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகி உள்ள 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போராட்டங்கள் நடக்கின்றன. நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுகிறது. மக்கள்கியூவில் நிற்கிறார்கள் என்றெல்லாம் பெரும் பரபரப்பை கிளப்புகிறார்கள். ஆனால் ம.தி.மு.க., சரியானது என வரவேற்கிறோம்.

    அழுத்தமாக ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். நரேந்திரமோடி பதவி ஏற்கும் போது நாங்கள் கூட்டணியில் இருந்தோம். அவர் ராஜபக்சேவை பதவி ஏற்புக்கு அழைத்த போது எந்த ஒரு தலைவரும் கண்டு கொள்ளாத நிலையில் நம் தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குஜராத் பவனுக்கு சென்று போராட்டம் நடத்தி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டோம்.

    நியாயம் என்றால் வரவேற்பேன். தற்போது நரேந்திர மோடி வரவேற்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள், அரசியல் திமிங்கலங்கள், 100, 500 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக டன் கணக்கில் அச்சடித்து ஏ.டி.எம். மையங்களில் பொருத்துகிற வகையில் மக்கள் அல்லல்படாதப்படி செய்து இருக்கலாமே? என்று கூறுகிறார்கள்.காற்றில் கூட தடம் கண்டு பிடித்து விடுவார்கள் கறுப்பு பண பதுக்கல் காரர்கள்.

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவிப்பதற்கு முன்பே வெளியே தெரிந்து இருந்தால் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பதுக்கல் காரர்கள் முதல் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள அரசியல் திமிங்கலங்கள் வரை எளிதாக கறுப்பு பணத்தை புழக்கத்தில் விட்டு இருப்பார்கள்.

    அதனால் தான் பிரதமர் மோடி நிதி அமைச்சருக்கே தெரியாமல் கேபினட்டுக்கே தெரியாமல், திடீரென அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதனால் சாதாரண மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் அனைவரது வரவேற்பையும் மோடி பெற்றுள்ளார்.

    நதிநீர் பிரச்சினையில் பஞ்சாப் அரசு விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அருகில் உள்ள அரியானா, ராஜஸ்தான், மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, ஒப்பந்தம் ஆகியவற்றை தூக்கி குப்பையில் போடு என சொல்லி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க மறுத்தால் ஜம்மு, காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உள்பட பல்வேறு மாநிலங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

    பஞ்சாப் அரசு நடவடிக்கைக்கு மோடி கவனம் செலுத்தாமல் இருந்தால் அந்தந்த மாநிலங்கள் தங்களுடைய நீராதாரங்களை பக்கத்து மாநிலங்களுக்கு கொடுக்க மாட்டோம் என அறிவித்தால் கேரள அரசும் இதே தான் செய்யும். கர்நாடக அரசும் இதே தான் செய்யும். தமிழகம் எத்தியோபியாவாக மாறும்.

    எனவே நதி நீர் பிரச்சினையில் எந்த வித பாரபட்சம் பார்க்காமல் மத்திய அரசு செயல்பட வேண்டும்.

    நாங்கள் நதிநீர் பிரச்சினை காரணமாக கேரளா அரசுக்கு எதிராகவும், கர்நாடக அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம். எனவே பஞ்சாப் அரசின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கோவை வந்த வைகோவுக்கு, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர். ஆர்.மோகன் குமார் தலைமையில உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×