search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கியூபாவின் சிங்கம் பிடல் காஸ்ட்ரோ மரணம்: கருணாநிதி, ராமதாஸ், வைகோ இரங்கல்
    X

    கியூபாவின் சிங்கம் பிடல் காஸ்ட்ரோ மரணம்: கருணாநிதி, ராமதாஸ், வைகோ இரங்கல்

    கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு கருணாநிதி, ராமதாஸ், வைகோ இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் சிங்கக்குட்டியாக உலவி பெருமைக்குரிய புரட்சித் தலைவனாக வளர்ந்த பிடல் காஸ்ட்ரோ நான் மறக்க முடியாத மாவீரர்களில் ஒருவர்.

    கியூபா நாட்டின் பெருமை போற்றும் விழா ஒன்று 2006-ம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள் சென்னையில் நடைபெற்ற போது அந்த மாநாட்டில் நான் வழங்கிய கவிதையினை தற்போது நினைவூட்டுவதே மறைந்த அந்த மாவீரனுக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகும்.

    உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில் உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக என்றால்; உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு; அவர் தான் பிடல் காஸ்ட்ரோ என்பேன்.

    இளம்பிராயத்திலேயே அவர் எழுச்சி முரசு! புரட்சிக் கனல்! இனங்கண்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டும் மூளைக்குச் சொந்தக்காரர்! இருளில் சர்வாதிகாரியாகவும், வெளிச்சத்தில் ஜனநாயக வாதியாகவும், இரட்டை வேட அரசியல் நடத்திய ‘பாடிஸ்டா’ எனும் பசுத்தோல் வேங்கை; அந்த விலங்கின் வே‌ஷத்தைக் கலைக்கத் துணிந்து; அதற்கோர் அணியைத் தயாரித்துப் போரிட்டுத் தோல்வியுற்று; சிறைப்பட்டு;

    நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது தான் “வரலாறு என்னை விடுதலை செய்யும்’’ எனும் வைர வரிகளைச் சரித்திரப் புத்தகத்தில் வையம் புகழ் சித்திரமாகப் பதிய வைத்தார்; காஸ்ட்ரோ!

    பாடிஸ்டா ஆட்சியில் பிடலுக்கு பதினைந்தாண்டு சிறை என்றதும் பற்றியெரிந்த மக்களின் புரட்சி நெருப்புக்கு; ஈடு கொடுக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில் சிறைக்கதவு திறந்தது, சிங்கம் வெளியே வந்தது அந்த சிங்கத்துக்கோர் சிறுத்தை துணை சேர்ந்தது; அதன் பெயர்தான் சேகுவேரா!

    தங்கத் தம்பியாம் ராவ் காஸ்ட்ரோவையும், தம்பி போன்ற சேகுவேராவையும், அங்கம் வகிக்கச் செய்து ஆர்த்தெழுந்து போரிட்டு முன்னேறவே; பங்கமுற்ற பாடிஸ்டா பயந்து நடுங்கி இனி கியூபா மக்களிடம் தன் சேட்டைகள் செல்லாதென்று நீயும் வா என்று ஆணவத்தையும் அழைத்துக் கொண்டு; நாட்டை விட்டே ஓடி விட்டான்; நல்லாட்சி மலர வழி விட்டு!

    கேட்டைக் களைந்தெறிந்த காஸ்ட்ரோ; தலைமை வழி காட்டியானார்! கடமையும் பொறுப்பும் வந்தவுடன் கடந்த காலத்தை மறந்து விடாமல்; சோதனைகளை சந்தித்து மறைந்த ஜோஷ் மார்ட்டியின் தலைமைக்கும், சாதனைகள் புரிந்து மறைந்த சிபாசின் வழிகாட்டுதலுக்கும், மதிப்பும் மரியாதையும் அளித்திட மறக்காத மாவீரர் தான் பிடல் காஸ்ட்ரோ!

    ‘கியூபா’ சின்னஞ் சிறிய நாடு ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய தேன் கூடு! தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா? தெரியாமல் அமெரிக்கா கை வைக்கும் போதெல்லாம்

    கொட்டி விடும் தேனீக்கள் கியூபாவின் மக்கள் அந்தக் கூடு காக்கும் காவல்காரர் தான் பிடல் காஸ்ட்ரோ!

    நல்வாழ்வுச் சட்டங்கள் பலவும் மக்கள் நலம் பெருக்கும் சாதனைகள் பலவும் இல்வாழ்வையும் துறந்து லட்சியத்துக்காக வாழ்ந்திடும் காஸ்ட்ரோவின் புகழ்மிகு வரலாற்றின் பொன்னேடுகளாய் புதிய புதிய பக்கங்களாய்ப் புரண்டு கொண்டேயிருக்கின்றன.

    உலகின் சர்க்கரைக் கிண்ணம் எனப் பேசுமளவுக்குக் கரும்பு வயல்களைக் கொண்ட கியூபாவில் சர்க்கரை வாங்குவதையே நிறுத்தி பொருளாதாரச் சரிவு ஏற்படுத்த அமெரிக்கா ஆயத்தமானபோது; சீனாவும், சோவியத்தும் தான் சிநேக நாடுகளாய்க் காஸ்ட்ரோவுக்கு கைகொடுத்த கதை உலகறியும்!

    “வாழை தென்னை மரங்களை வலிமைமிகு துதிக்கையால் யானை முறித்துப் போட்டு விடும் அந்த யானை போன்றதே அமெரிக்கா’ என்றனர்.

    அதற்கு காஸ்ட்ரோ அஞ்சி நடுங்கவில்லை. வாழை மரம், தென்னை மரங்களை; யானை, வாயிலே போட்டுக் கொள்ளலாம் எளிதாக!

    ஆனால் அங்குசத்தை யானை விழுங்க முடியுமா? அங்குசந்தான் கியூபா; அமெரிக்க யானைக்கு! வெள்ளி விழா ஐ.நா. சபைக்கு நடந்த போது பல நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில் முப்பத்திரண்டு வயது நிரம்பிய சிவப்பு நட்சத்திரமாக முதுபெரும் தலைவர்களால் பாராட்டப் பெற்றவர் பிடல் காஸ்ட்ரோ முதற்கட்டமாக ஸ்பெயின் நாட்டின் காலனி கியூபா அடுத்த கட்டம் அமெரிக்காவின் காலுக்கு அணியாக ஆக வேண்டும் கியூபா என்று ஆதிக்கபுரியினர் முனைந்த போது; அது தான் முடியாது; அந்தக் காலையே முடமாக்குவோமென்று மக்களைத் திரட்டினார் பிடல் காஸ்ட்ரோ மலைப்புற்ற ஏகாதிபத்தியவாதிகள்;

    பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடினர் என்றால்; அது பிடல் காஸ்ட்ரோவின் உறுதிக்கும் அவரைப் பின்பற்றும் மக்களின் மகத்தான சக்திக்கும்; பின்பலமாய் மார்க்சின் தத்துவம் இருப்பதற்கும் அடையாளம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

    அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆயுத பலத்தோடு கியூபாவில் அடக்குமுறை ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்த சர்வாதிகாரி பாடிஸ்டுடாவை எதிர்த்து இளம்வயதில் ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தொடங்கினார் காஸ்ட்ரோ.

    மான்கடா படைத்தளத்தைத் தகர்க்க முனைந்து, அந்த முயற்சி தோற்றபின், சகாக்கள் பலரைப் பலிகொடுத்த நிலையில், சியாரா மஸ்ட்ரா குன்றுகளில், ஆயுதப்பயிற்சிகளைத் தந்து, அர்ஜெண்டினாவில் பிறந்த மாவீரன் சேகுவேராவின் தோள் வலியை துணைவலியாகப் பெற்று, ஆறு ஆண்டு காலப் போராட்டத்தில், சர்வாதிகாரி பாடிஸ்டுடாவின் படைகளை நொறுக்கி, 1959-ம் ஆண்டு ஜனவரி 8-ம் நாள் தலைநகர் ஹவானா வீதிகளில் வெற்றிப் புரட்சிக்கொடி ஏந்தி வீர வலம் வந்தார். கியூபக் குடியரசை நிறுவினார்.

    உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அருகில் 80 கல் தொலைவில் இருந்து கொண்டே, எதற்கும் அடிபணியாத துணிச்சல்காரராக கியூபா அரசை நடத்தினார். எத்தனையோ கொலை முயற்சிகளில் உயிர் தப்பினார்.

    உலகம் போற்றுகின்ற புரட்சி நாயகனுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி இருப்பதாவது:-

    கியூபா நாட்டின் பிரதமராகவும், அதிபராகவும் பணியாற்றிய பிடல் காஸ்ட்ரோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

    புரட்சித் தலைவர், மார்க்சீய, லெனினியவாதி என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் காஸ்ட்ரோ. கியூபா நாட்டில் பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும், அவர் ஒருபோதும் பணக்காரராக வாழவில்லை; பணக்காரர்களுக்காகவும் வாழவில்லை.

    மாறாக பாட்டாளி மக்களுக்காக பாட்டாளியாகவே வாழ்ந்தவர். கியூபாவில் கொடுங்கோலர் பாடிஸ்டாவுக்கு எதிராக 8 ஆண்டுகளாக உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் போராடிய காஸ்ட்ரோ, அம்முயற்சியில் சில தோல்விகளை சந்தித்தபோதும் பின்வாங்கவில்லை. தமது சகோதரர் ரால் காஸ்ட்ரோ, சேகுவேரா ஆகியோருடன் இணைந்து 1959-ம் ஆண்டில் பாடிஸ்டா சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி தமது ஆட்சியை அமைத்தார்.

    கியூபாவில் ஒற்றை ஆட்சி முறையை அறிமுகம் செய்ததற்காக காஸ்ட்ரோவை சர் வாதிகாரி என்று சிலர் விமர்சித்தாலும் அவர் எப்போதுமே மக்களின் குரல்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்தவர். இல்லாவிட்டால் இறப்புக்கு பிறகும் மக்களால் போற்றப்படும் தலைவராக திகழ்ந்திருக்க முடியாது.

    பொதுவுடமைவாதத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த காஸ்ட்ரோவின் மறைவு பொதுவுடைமைவாதிகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பல்வேறு வழிகளிலும் முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்த காஸ்ட்ரோவுக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் கியூப மக்களுக்கும் பொதுவுடைமைவாதிகளுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×