search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பணத்துக்காக அ.தி.மு.க- தி.மு.க. கை கோர்த்துள்ளன: தமிழிசை தாக்கு
    X

    கருப்பு பணத்துக்காக அ.தி.மு.க- தி.மு.க. கை கோர்த்துள்ளன: தமிழிசை தாக்கு

    மக்கள் பிரச்சினைகளுக்கு ஒன்று சேராதவர்கள் இன்று கருப்பு பணத்துக்காக அ.தி.மு.க- தி.மு.க. கை கோர்த்துள்ளன என்று டாக்டர் தமிழிசை கூறினார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கணக்கில்லாமல் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதில் பிரதமருக்கு மக்கள் முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். வரிசையில் மக்கள் நின்று சிரமத்திற்கு உள்ளாகினர் என்பதற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருவோம். ஆனால் வருங்காலத்தில் வரிகள் எல்லாம் தங்களுக்கு சாதகமாகும் என்பதை உணர்ந்தே, மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

    நாட்டு மக்கள் அனைவரும் இப்படி ஒட்டுமொத்தமாக பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதால், எதிர்க்கட்சிகள் அதை பொறுக்க முடியாமல் மக்களை காரணம் காட்டி மக்களவையை முடக்குவதும், மக்களவையில் ஆர்ப்பாட்டம் செய்வதும், நாடே பிரதமருக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல், நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இதை எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நாட்டு மக்கள் நலனுக்காக திரிணாமுல் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றிணைகிறார்கள். நாடு சந்தித்த மிகப் பெரிய பிரச்சினையாகட்டும், காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனை ஆகட்டும், மக்கள் பிரச்சினைகளுக்காக ஒன்றிணையாத தி.மு.க, அ.தி.மு.க இன்று கறுப்பு பண விவகாரத்தில் கைகோர்த்திருக்கிறார்கள் என்றால், மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

    போராடும் கட்சிகளின் பின்புலத்தை பார்த்தீர்கள் என்றால், மக்கள் பணத்தை வாரி சுருட்டியவர்களும், வரி ஏய்ப்பவர்களும் தான் முன் நிற்கிறார்கள். ஆனால் இன்று, வரிசையில் நிற்கும் மக்களைப்பற்றி கவலைப் படுகிறோம் என்று ஒரு காரணத்தை முன் நிறுத்தி, இதுவரை மக்களைப்பற்றி கவலைப்படாதவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    Next Story
    ×