search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    500 ரூபாய், 1000 ரூபாய் பிரச்சினை: தூத்துக்குடியில் உப்பு- மீன் வர்த்தகம் கடும் பாதிப்பு
    X

    500 ரூபாய், 1000 ரூபாய் பிரச்சினை: தூத்துக்குடியில் உப்பு- மீன் வர்த்தகம் கடும் பாதிப்பு

    500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் வர்த்தகம் முடங்கி உள்ளது. உப்பு, மீன் விற்பனை, காய்கறி ஏற்றுமதி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    நெல்லை:

    தூத்துக்குடியில் உப்பு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உப்பு விற்பனையாளர் சங்க தலைவர் ஜெயபால் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் இருந்து தினமும் ரூ.5 லட்சம் மதிப்பில் உப்பு ஏற்றுமதியாகிறது. இங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் தினமும் 400 லாரிகளில் உப்பு கொண்டு செல்லப்பட்டு வந்தது. தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் முடக்கம் மற்றும் சில்லறை தட்டுப்பாட்டால் உப்பு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மழை இல்லாததால் உப்பு உற்பத்தி அதிக அளவில் உள்ளது. ஆனால் தற்போது விற்பனை முடங்கி உள்ளதால் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் கூலித் தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டள்ளனர். கடந்த 7 நாட்களாக ஏற்றுமதி முடங்கி உள்ளதால் ரூ.50 லட்சம் வரை உப்பு உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.


    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடியில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசைப்படகு தொழிலாளர் சங்க தலைவர் ஜான்சன் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் 250 விசைப்படகுகள் உள்ளன. இதன் மூலம் 5 ஆயிரம் மீனவர்கள், 10 ஆயிரம் மீன் வியாபாரிகள் என தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். தினமும் ரூ.2 கோடி வரை இங்கு மீன் விற்பனை நடந்து வந்தது. நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து மீன் வாங்கி செல்வார்கள்.

    இந்தநிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் மீன் விற்பனை முழுவதுமாக முடங்கி விட்டது. கடந்த 7 நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் இன்று வரை தூத்துக்குடியில் மட்டும் ரூ.15 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மீன்பிடி தொழிலை சார்ந்த ‘ஐஸ்பிளான்ட்’ நிறுவனங்கள் அதிக அளவில் தூத்துக்குடியில் உள்ளன. மீன்பிடி தொழில் முடங்கியதால் தினமும் அந்நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக- கேரளா எல்லையில் உள்ள செங்கோட்டையில் ஏராளமான காய்கறி மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இங்கு தற்போது பல லட்சம் மதிப்பிலான காய்கறிகள் தேங்கி உள்ளன. இதுகுறித்து காய்கறி மொத்த விற்பனை கடை வைத்துள்ள சந்திரகலா கூறியதாவது:-

    உருளை, காரட், பீட்ரூட் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகள் ஓட்டன்சத்திரம், ஊட்டி, திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்களில் இருந்து மொத்தமாக வாங்கி, இங்கிருந்து கேரளாவிற்கு விற்பனை செய்கிறோம். மேலும் கடையநல்லூர், சுரண்டை, பாவூர்சத்திரம் ஆகிய இடங்களில் இருந்து தக்காளி, கத்தரி, பூசனி போன்ற காய்கறிகளை விவசாயிகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் தினமும் ரூ.10 லட்சத்திற்கும் மேல் விற்பனை நடக்கும்.

    தற்போது 500, 1000 ரூபாய் முடக்கத்தால் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு வருவதால் அவர்களுக்கு நாங்கள் காய்கறிகளை விற்பனை செய்யவில்லை. சில்லறை விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 2000 ரூபாய் நோட்டுகளுடன் வருபவர்களுக்கு சில்லறை கொடுக்க முடியாமல் திணறி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தையல் நாயகி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்குள்ள காய்கனி மொத்த விற்பனை யாளர் சந்திரன் கூறியதா வது:-

    ஆலங்குளம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இங்கு தான் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்கு கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் கேரளாவிற்கும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

    தினமும் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரைஆலங்குளம் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் ஏற்றுமதியாகும். தற்போது 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் காய்கறி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் மீன்பிடி தொழில், உப்பு ஏற்றுமதி, காய்கனி வியாபாரம் என அனைத்து தொழில்களும் கடந்த ஒரு வாரமாக முடங்கி உள்ளன. இரு மாவட்டங்களிலும் இதுவரை ரூ.100 கோடி அளிவில் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    Next Story
    ×