என் மலர்
செய்திகள்

முள்ளக்காட்டில் ஆட்டோ டிரைவர் கல்லால் தாக்கி கொலை?: போலீசார் விசாரணை
முள்ளக்காடு:
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பார்வதிபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சங்கர் (வயது27). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் உடைய சங்கர் அடிக்கடி தனது பெற்றோரிடம் செலவுக்கு பணம் கேட்பாராம். இதில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை சங்கர் பெற்றோரிடம் வழக்கம் போல குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் கோபித்து கொண்டு சங்கர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
பின்னர் இரவு 9 மணி அளவில் சங்கர் நண்பர்களுடன் குடித்து விட்டு அப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். இன்று அதிகாலை முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையம் குடிநீர் தொட்டி அருகே சங்கர் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து சங்கரின் உடலை பார்த்து கதறி அழுதனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ், ஏ.எஸ்.பி. செல்வரத்தினம், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சங்கரின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் இருந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பின்னர் சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெற்றோர் மது குடிக்க பணம் தராததால் கோபம் அடைந்த சங்கர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து வாட்டர் டேங்க் அருகே அமர்ந்து மது குடித்துள்ளார்.
அப்போது அவர் போதை தலைக்கேறியதும் வாட்டர் டேங்க் மேலே ஏறி தற்கொலைக்கு முயன்றாராம். அப்போது அவரை நண்பர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. எனவே சங்கர் குடிநீர் தொட்டியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நண்பர்களால் சங்கர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.