என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது: கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சாலை மறியல்
    X

    ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது: கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சாலை மறியல்

    மத்திய அரசு ரூ.500, மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    மத்திய அரசு ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந் தேதி அறிவித்தது.

    இதனால் வங்கியில் அந்த பணத்தை மாற்ற மக்கள் நீண்ட வரிசசையில் காத்து நிற்கின்றனர். ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கடலூரில் பெரும் பாலான ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை. ஒரு சில ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகின்றன. எனவே பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய அரசு ரூ.500, மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

    இதையொட்டி இன்று காலை தலைமை தாபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.

    அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்ய தயாரானார்கள். தகவல் அறிந்ததும் இன்ஸ் பெக்டர்கள் வெற்றிச் செல்வன், சரவணன், சீனிபாபு, சப்-இன்ஸ் பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை என்று இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வம் கூறினார். அதற்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி உண்டு என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

    உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மனிடம் இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் இந்தபிரச்சினை குறித்து செல்போனில் பேசினார். அதற்கு அவர் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.

    இந்த தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகளிடம் இன்ஸ் பெக்டர் கூறினார். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்வோம் என்று எச்சரித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசாரை கண்டித்து கடலூர் புதுவை சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

    அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. போலீசுக்கு எதிராக கண்டன கோ‌ஷம் எழுப்பினர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்குமிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    சாலைமறியலில் ஈடுபட முயன்ற மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×