search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 500 பேர் கைது
    X

    ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 500 பேர் கைது

    பாரிமுனை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயற்சி செய்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 500 பேர் கைது செய்யபட்டனர்.

    சென்னை:

    மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை கண்டித்தும், இந்த அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனறு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்யினர் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று காலை பாரிமுனை ராஜாஜி சாலை சந்திப்பில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், மாவட்ட செயலாளர் பாக்யம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் ஜி.ராம கிருஷ்ணன் தலைமையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்தனர்.

    இதனால் போலீசாருக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ராஜாஜி சாலை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். அவர்கள் கையில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஜி.ராம கிருஷ்ணன் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தையொட்டி ரிசர்வ் வங்கியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    முன்னதாக ஜி.ராம கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஊழல், கருப்பு பணம் ஒழியாது. 94 சதவீத கருப்பு பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் அறிவித்த கருப்பு பணம் மீட்கப்படும் என்பதை நிறைவேற்ற முடியாததால் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மோடி வெளியிட்டு இருக்கிறார்.

    இதனால் சாதாரண மக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகள் முன்பு ஒரு வாரமாக தவித்து வருகிறார்கள். மேலும் கைவிரலில் ‘மை’ வைக்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

    ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும். டிசம்பர் 30-ந் தேதி வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

    மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்புகளை திரும்ப பெறும்வரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×