என் மலர்
செய்திகள்

தேனி அருகே பஸ் மோதி 6-ம் வகுப்பு மாணவி பலி
தேனி:
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரசங்கிலி. இவரது மகள் நித்யா(வயது11). அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டார்.
சாலையை கடந்து சென்றபோது வேகமாக வந்த தனியார் பஸ் நித்யா மீது மோதியதில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். தாக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்தனர்.
சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் மறியல் செய்த கிராம மக்களிடம் சமரசபேச்சு நடத்தினர். மோதிய பஸ் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், வேகத்தடை அமைக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






