என் மலர்
செய்திகள்

மணல்மேடு பகுதி ரவுடி கொலையில் 3 பேர் கைது
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல்நிலையத்திற்குட்பட்ட ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது43). இவர் மீது கொலை- கொள்ளை வழக்குகள் உள்ளன. மனோகர் சென்னையில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த கிராமமான ஆத்தூர் வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மண்ணியாற்றங்கரை, கடலங்குடி பஸ்நிறுத்தம் அருகே மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து மணல்மேடு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.மேலும் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று மணல்மேடு பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்,சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடலங்குடி சுக்ராவரம் என்ற இடத்தில் ஒருமோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஆத்தூர் பகுதி நடுத்தெருவை சேர்ந்த மணி மகன் சின்னப்பா(28), கோவிந்தசாமி மகன் மாணிக்கம்(36). மரத்துறை பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சரவணகுமார்(30) என்பதும், கடந்த 7-ந்தேதி ரவுடி மனோகரனை வெட்டி கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஓப்படைத்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி அவர்கள் 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கில் சுமன், பாலகிருஷ்ணன், சுரேந்தர், ராஜா ஆகிய மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது






