என் மலர்
செய்திகள்

சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி: 3 பேர் படுகாயம்
சென்னிமலை:
சென்னிமலை அருகே வெப்பிலி பிரிவில் தனியார் பனியன் நிறுவனம் செயல்படுகிறது .இங்கு இருந்து நேற்று இரவு பனியன் துணிகளை ஏற்றி கொண்டு திருப்பூருக்கு ஒரு லாரி சென்றது.
இந்த லாரி சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் எல்லக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தது.
ஒரு குறுகிய வளைவில் லாரியை டிரைவர் ஆனந்த் திருப்பினார் அப்போது நிலை தடுமாறிய லாரி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் திருப்பூர் போயம் பாளையத்தை சேர்ந்த டிரைவர் ஆனந்த் (வயது 30) என்பவர் லாரியின் அடியில் சிக்கினார்.
இதில் தலை நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு திருமணமாகி சுகப்பிரியா என்ற மனைவியும் 3 வயதில் யுவஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
மேலும் லாரியில் பயணம் செய்த 3 பேர் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இது குறித்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






