search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் ஆங்கிலத்தில் பேசிய ஜெயலலிதா
    X

    உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் ஆங்கிலத்தில் பேசிய ஜெயலலிதா

    உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆங்கிலத்தில் பேசினார். அப்போது, “நீங்கள் எனக்கு அளித்த நல்ல சிகிச்சைக்கு நன்றி” என தெரிவித்தார்.
    சென்னை:

    உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆங்கிலத்தில் பேசினார். அப்போது, “நீங்கள் எனக்கு அளித்த நல்ல சிகிச்சைக்கு நன்றி” என தெரிவித்தார்.

    உடல்நலக் குறைவால் கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று 25-வது நாளாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலையை, டாக்டர் சிவக்குமார் தலைமையிலான அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினரும், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும், எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகியோரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கண்விழித்து பார்த்த அவர், தாகம் எடுப்பதாக கூறி 2 முறை டாக்டர்களிடம் தண்ணீர் வாங்கி குடித்தார். மேலும், அவருக்கு திட உணவாக வேகவைக்கப்பட்ட ஆப்பிள் துண்டுகளும் சாப்பிட கொடுக்கப்பட்டன.

    ஜெயலலிதாவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டாலும், இன்னும் சில நாட்கள் அவர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தநிலையில், சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் நேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆங்கிலத்தில் பேசினார்.

    அப்போது அங்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும், எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ டாக்டர்களும் இருந்தனர். அவர்களிடம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ‘நீங்கள் எனக்கு அளித்த நல்ல சிகிச்சைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

    புன்முறுவல் பூத்த டாக்டர்களும், அவரது நன்றியை ஏற்றுக்கொண்டதுடன், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் தெரிவித்தனர். தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பெண் பிசியோதெரபி நிபுணர்களும் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். காலை 9.30 மணியளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்த அவர்கள் மாலை 6 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து, சென்னையில் தங்கியிருக்கும் அவர்கள் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சையை தொடர உள்ளனர்.

    நேற்று மாலை 4.50 மணிக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்த அவர், இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு நேற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் அதிகம் கூடி இருந்தனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய அனைத்து மத பிரார்த்தனைகளும் அங்கு நடைபெற்றது. ராகுகால நவகிரக பூஜை நேற்று நடந்தது. எழும்பூர் மோதி பாபா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்ட பிரசாதம் அங்குள்ள அ.தி.மு.க.வினருக்கு வழங்கப்பட்டது. கிறிஸ்தவர்களும் அங்கு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
    Next Story
    ×