என் மலர்
செய்திகள்

அறந்தாங்கியில் வீட்டில் பதுக்கிய 2613 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
அறந்தாங்கி:
அறந்தாங்கியில் மதுபான பார்களில் மதுவுடன் கலந்து விற்பனை செய்வதற்காக வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 2613 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கியில் உள்ள சில டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த மதுபானங்கள் அறந்தாங்கி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அறந்தாங்கி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன், இன்ஸ்பெக்டர் பால முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீசார் அறந்தாங்கியை அடுத்த மெரினா நகரில் உள்ள குறிப்பிட்ட ஒரு வீட்டை திடீரென்று சோதனை இட்டனர். அப்போது அந்த வீட்டின் போர்ட்டிகோவில் ஒரு சரக்கு ஆட்டோவில் சட்ட விரோதமாக அட்டை பெட்டிகளில் புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து போலீசார் வீட்டின் உள்ளே சென்று சோதனை இட்டபோது ஒரு அறையில் ஏராளமான புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள், தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் விற்பனையாகும் மதுபானங்களில் காலி பாட்டில்கள், அந்த பாட்டில்களில் பொருத்தக் கூடிய மேல் மூடிகள் பெட்டி பெட்டியாக கிடந்தன. உடனே சரக்கு ஆட்டோ மற்றும் வீட்டின் உள்ளே இருந்த 2613 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள், காலி பாட்டில்கள், மூடிகள் மற்றும் சரக்கு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் மதுபாட்டில்கள் பதுக்கல் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் என்பவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், அறந்தாங்கி துணை சூப்பிரண்டு செல்ல பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை ஆகும் பாட்டில் மதுபானம் சுமார் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அந்த மதுபான பாட்டில்களை மொத்தமாக தமிழகத்திற்குள் வாங்கி வரும் ஒருசில மதுபானக் கூட ஒப்பந்ததாரர்கள், ஒரு புல் பாட்டில் மதுவை, 4 குவார்ட்டர் பாட்டில்களில் நிரப்பி, அந்த பாட்டில்களில் லேபிள் ஒட்டி, மூடிவிடுகின்றனர். இந்த பாட்டில் அச்சுஅசல் மதுபான பாட்டில்களை போன்றே இருக்கும்.
இந்த குவார்ட்டர் பாட்டில்களை மதுபானக்கூடங்களில் ஒரு பாட்டில் சுமார் 80 முதல் 100 வரை விற்பனை செய்கின்றனர். இவ்வாறு விற்பனை செய்வதால், மதுபானங்களை கடத்தி வருபவருக்கு ஒரு பாட்டிலுக்கு பாதிக்கு பாதி அதாவது 100க்கு 100 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. இதுபோன்றே அறந்தாங்கியில் உள்ள ஒரு சில மதுபானக் கூடங்களில் புதுச்சேரி மாநில மதுபானங்களை கலந்து விற்பனை செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அவ்வாறு கலந்து விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து பதுக்கப்பட்ட மதுபான பாட்டில்களைத் தான் அறந்தாங்கி போலீசார் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.






