என் மலர்tooltip icon

    செய்திகள்

    கழுத்தை அறுத்து பெண் கொலை: 10 பேரிடம் போலீசார் விசாரணை
    X

    கழுத்தை அறுத்து பெண் கொலை: 10 பேரிடம் போலீசார் விசாரணை

    சீர்காழி அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள தாண்டவன் குளத்தை சேர்ந்தவர் அகோரமூர்த்தி. இவர் கேரள மாநிலம் கொச்சியில் படகு கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சீத்தா (வயது 35). இவர் தாண்டவன்குளத்தில் தனியாக வசித்து வந்தார். அகோரமூர்த்தி-சீத்தா தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

    இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி சீத்தா வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 5½ பவுன் தாலிச்செயின் மாயமாகி இருந்தது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீத்தா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சீத்தா செல்போனில் அதிகமாக பேசிய 10 நபர்களை பிடித்து கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் கொலையாளிகளை போலீசார் கண்டுபிடித்து கைது செய்யாததால் சீத்தாவின் உறவினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் கொலையாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×