என் மலர்
செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே பஞ்சு ஏற்றி வந்த லாரி தீ பிடித்து எரிந்தது
ஒட்டன்சத்திரம்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ராஜபாளையம் நோக்கி வந்துகொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் உள்ள மகுடஞ்சாவடியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார்.
ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையகோட்டை ஆறுகண் பாலம் என்ற இடத்தில் இன்று அதிகாலை லாரி வந்தபோது தீப்பிடித்து பஞ்சு எரிந்துகொண்டிருந்தது. இதை பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் சத்தம்போட்டு டிரைவரை கீழே இறக்கினர். உடனடியாக வேடசந்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் துரைச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயிணை அணைத்தனர். இருப்பினும் லாரியில் இருந்த பஞ்சு மற்றும் லாரியின் பெரும்பகுதி எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என தெரிகிறது.
இது குறித்து டிரைவர் முருகேசன் இடையகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லாரியில் அளவுக்கு அதிகமாக பஞ்சு ஏற்றி வந்தபோது தாழ்வாக சென்ற மின்சார வயர் உரசி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.






