search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிலையம்-சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்
    X

    விமான நிலையம்-சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையைத் நாளை தொடங்கி வைக்கிறார்
    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதில் கணிசமான ரெயில் தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

    முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் மேம்பாலம் பணிகள் முடிந்தன. அங்கு கடந்த ஆண்டு முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து சின்னமலை - விமான நிலையம் மற்றும் செனாய் நகர் - கோயம்பேடு இடையிலான சுரங்கப் பாதைகளை நிறைவு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    இதில் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை பணி கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஒப்புதல் வழங்கினார். 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்து அவர் இந்த ஒப்புதலை வழங்கினார்.

    இதையடுத்து சின்னமலை - விமான நிலையம் இடையே நாளை (புதன்கிழமை) முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது. இதற்கான விழா தலைமைச் செயலகத்திலும், விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்திலும் நாளை காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையைத் தொடங்கி வைப்பார். அதோடு விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரெயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.

    மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, மத்திய சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் விழாவுக்கு முன்னிலை வகிப்பார்கள். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகனராவ், மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக செயலாளர் ராஜீவ் கெளபா, தமிழக அரசின் முதன்மை செயலாளர் கிருஷ்ணன், சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை விமான நிலையம் வரை நீட்டிக்கப்படுவதால் இனி கோயம்பேட்டில் இருந்து சென்னை விமான நிலை யம் வரை பயணிகள் மிக குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். தற்போது கோயம்பேடு - ஆலந்தூர் இடையே தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இனி பயணிகள் எண்ணிக்கை தினமும் 15 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை ரெயில் சேவை தொடங்கும் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மொத்த தூரம் 8.6 கிலோ மீட்டராகும். இதில் 6 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயிலுக்கான கட்டணம் முதல் 2 கி.மீ-க்கு ரூ. 10, 2 முதல் 4 கி.மீ-க்கு ரூ.20, 4 முதல் 6 கி.மீ.-க்கு ரூ.30, 6 முதல் 8 கி.மீ.-க்கு ரூ.40, 8 முதல் 10 கி.மீ.-க்கு ரூ.50, 10 முதல் 15 கி.மீ-க்கு ரூ.60 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி விமான நிலையத்தில் சின்னமலை வரை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும். விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

    இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கட்டணக் குறைப்பு பற்றி இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மெட்ரோ ரெயில் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்ட்ரல், எழும்பூரில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் போது கட்டணம் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.
    Next Story
    ×