search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் கடன் தொல்லையால் பள்ளி ஆசிரியர் தற்கொலை: போலீசார் விசாரணை
    X

    தர்மபுரியில் கடன் தொல்லையால் பள்ளி ஆசிரியர் தற்கொலை: போலீசார் விசாரணை

    தர்மபுரியில் கடன் தொல்லை காரணமாக பள்ளி ஆசிரியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி, கருவூல காலனி பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 44). இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இவர் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி புதிய வீடு ஒன்றை கட்டினார். பின்னர் இந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.

    இதனால் கடன் தொல்லை அதிகரித்தது. கடன் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே மன உளைச்சலுக்கு உள்ளான அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது.

    இன்று அதிகாலையில் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், ஜாகீர் உசேன் அறைக்கதவை பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலையில் வெகு நேரமான பிறகும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து மனைவி மற்றும் மகள்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறைக்கதவை திறந்து பார்த்தபோது அங்கு ஜாகீர் உசேன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்த கொண்ட ஆசிரியர் ஜாகீர் உசேனுக்கு ராதிகா என்ற மனைவி உள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
    Next Story
    ×