என் மலர்
செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 கோடி கடன் உதவி: கலெக்டர் தகவல்
ஊட்டி:
ஊட்டியில் கூட்டுறவுத் துறையின் சார்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.153.65 கோடி மதிப்பீட்டிலான கடன் தள்ளுபடிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை தாங்கி வழங்கினார்.
விழாவில் கலெக்சர் சங்கர் பேசும் போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள், 3 பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், 3 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் 1794 விவசாயக் கூட்டு பொறுப்புக் குழுக்களிலுள்ள 34,966 உறுப்பினர்களுக்கு ரூ.153.65 கோடி பயிர்க்கடன் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் நகைகளை அடமானம் வைத்து விவசாயம் செய்ததன் மூலமாக நஷ்டமடைந்த 470 விவசாயிகளுக்கு ரூ.3.18 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் இந்நாள் வரையில் 344 சங்க உறுப்பினர்களுக்கு ரூ.1.53 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. நகை ஈட்டுக் கடன்களாக கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 12,983 பேருக்கு ரூ.3.31 கோடியும், 104 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.97 கோடி கடனாகவும், 996 உறுப்பினர்களுக்கு இதரக் கடன்களாக ரூ.14.56 கோடியும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கடன்களாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இதில் கே.ஆர்.அர்ஜூனன், குன்னூர் எம்.எல்.ஏசாந்திராமு, மாவட்ட ஊராட்சித்தலைவர் மேனகா, நகரமன்ற தலைவர் சத்தியபாமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.