search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழை-எளிய மக்களுக்காக தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபம்: ஜெயலலிதா அறிவிப்பு
    X

    ஏழை-எளிய மக்களுக்காக தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபம்: ஜெயலலிதா அறிவிப்பு

    ஏழை எளிய மக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபம் அமைக்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அனைத்து தரப்பு மக்களும் குடியிருப்பதற்கு சொந்த இல்லம் பெற்றிட வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் எனது தலைமையிலான அரசு பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    கடந்த 5 ஆண்டுகளில், தமிழ்நாடு குடிசைப் பகுதி வாரியம் மூலம் 59,023 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 10,537 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அனைத்து தரப்பு மக்களின் நலன் பேணும் வகையில், பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

    1. நடப்பு நிதியாண்டில், 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம் 50,000 குடியிருப்புகள் கட்ட நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இதில் பயனாளிகள் தங்கள் இடங்களில் வீடுகள் கட்டும் வகையில் 45,000 வீடுகளுக்கு 945 கோடி ரூபாய் அளவிற்கு மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும், 5,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும் நான் உத்தர விட்டுள்ளேன்.

    2. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவர்களின் நலன் கருதி, அவர்கள் விற்பனை பத்திரம் பெறும் வகையில் ஏற்கெனவே 2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் வட்டி தள்ளுபடி திட்டம் எனது தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 14,992 ஒதுக்கீடுதாரர்கள் பயன் பெற்றுள்ளனர்.

    வாரியத்தில் மனை, வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் 23,600 பேர் இன்னமும் விற்பனை பத்திரம் பெற இயலவில்லை என்பதனை அறிந்து, அவர்களும் விற்பனை பத்திரம் பெறும் வகையில், அவர்களின் வட்டிச் சுமையை குறைக்க, வட்டிச் சலுகைத் திட்டம் ஒன்றினை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு மாதத் தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டியினை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை வருடத்திற்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்யவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

    3. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் சோழிங்க நல்லூரில் 1,500 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் 2,000 குறைந்த வருவாய்ப் பிரிவு/ மத்திய வருவாய்ப் பிரிவு/ உயர் வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளை கட்ட நான் உத்தரவிட்டுள்ளேன். இவை 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    இத்திட்டத்தின் கீழ், குறைந்த வருவாய்ப் பிரிவு வீடுகளின் விலை 20 லட்சம் ரூபாய்க்கு கீழ் நிர்ணயிக்கப்படும். ஒரு வரவேற்பறை, இரு படுக்கையறைகள் மற்றும் ஒரு சமையலறை கொண்டதாக இவை கட்டப்படும். வீட்டின் பரப்பளவு 645 சதுர அடி என இருக்கும். மத்திய வருவாய்ப் பிரிவினருக்கான வீடுகள் விலை 30 லட்சம் ரூபாய்க்கு குறைவாக நிர்ணயிக்கப்படும். இவை 807 சதுர அடி பரப்பளவு உள்ளதாக இருக்கும்.

    4. கடந்த 5 ஆண்டுகளில் சிதிலமடைந்த அரசு ஊழியர்கள் குடியிருப்புகளில், 660 அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகள் மீண்டும் கட்டப்பட்டுள்ளன.

    திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ஈரோடு மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் 904 அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன.

    இந்த குடியிருப்புகளை இடித்து விட்டு 908 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகைக் குடியிருப்புகளும், சுயநிதி திட்டத்தின்கீழ் பொது மக்களுக்கு விற்பனைக்காக 1,266 குடியிருப்புகளும் 401 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கட்டுவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

    5. நடப்பாண்டில் பல்வேறு தரப்பு மக்களின் வீட்டுவசதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, 256 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில், சுயநிதி திட்டத்தின் கீழ் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 873 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தினை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் செயல்படுத்தவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

    6. ஏழை எளிய மக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த வாடகையாக அதிகம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ‘அம்மா திருமண மண்டபங்கள்’ கட்ட நான் உத்திரவிட்டுள்ளேன்.

    இந்த மண்டபங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒப்பனை அறை, மணமகன் மற்றும் மணமகளுக்கான தனி அறைகள், விருந்தினர்களுக்கான அறைகள், விருந்து உண்ணும் அறை, சமையல் கூடம் என அனைத்து வசதிகளும் இருக்கும். இந்தத் திட்டம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் ஆகியவை மூலம் செயல்படுத்தவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இத்திட்டமானது, தண்டையார்பேட்டை, வேளச்சேரி, அயப்பாக்கம், பருத்திப்பட்டு, பெரியார் நகர், கொரட்டூர், மதுரை மாவட்டத்தில் அண்ணா நகர், திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் கொடுங்கையூர், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை ஆகிய 11 இடங்களில் 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

    இந்த திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

    இந்த நடவடிக்கைகள் மூலம், அனைத்து தரப்பு மக்களும் வீட்டு வசதி பெறவும், ஏழை ஏளிய மக்கள் குறைந்த வாடகையில் தங்களது சுப நிகழ்ச்சிகளை நடத்தவும் வழி வகை ஏற்படும்.

    இவ்வாறு முதல்-அமைச் சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    Next Story
    ×