search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கயத்தார், சிங்கம்புணரி, ஆண்டிமடம் உள்பட தமிழகத்தில் மேலும் 5 புதிய தாலுகாக்கள்: ஜெயலலிதா உத்தரவு
    X

    கயத்தார், சிங்கம்புணரி, ஆண்டிமடம் உள்பட தமிழகத்தில் மேலும் 5 புதிய தாலுகாக்கள்: ஜெயலலிதா உத்தரவு

    கயத்தார், சிங்கம்புணரி, ஆண்டிமடம் உள்பட தமிழகத்தில் மேலும் 5 புதிய தாலுகாக்களை உருவாக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    கயத்தார், சிங்கம்புணரி, ஆண்டிமடம் உள்பட தமிழகத்தில் மேலும் 5 புதிய தாலுகாக்களை உருவாக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் 32 மாவட்டங்களும், 85 வருவாய் கோட்டங்களும், 285 தாலுகாக்களும் (வருவாய் வட்டங்கள்), 1,188 குறுவட்டங்களும், 16,682 வருவாய் கிராமங்களும் உள்ளன.

    இந்த நிலையில் வருவாய்த்துறையினரின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைந்து கிடைக்கும் வகையில் மேலும் 5 தாலுகாக்களை புதிதாக உருவாக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அனைத்து துறைகளுக்கும் தாய் துறையாக விளங்கி, நிர்வாக அமைப்பின் முதுகெலும்பாக திகழ்ந்து, சமுதாய வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றி வருவது வருவாய்த்துறை ஆகும்.

    இத்துறையின் பணிச்சூழலை மேம்படுத்தும் பொருட்டும், பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டும், கடந்த 5 ஆண்டுகளில் 7 மாவட்ட ஆட்சித்தலைவர் (கலெக்டர்) அலுவலகங்கள், 6 கோட்டாட்சியர் அலுவலகங்கள், 64 வட்டாட்சியர் அலுவலகங்கள், 54 வருவாய் ஆய்வாளர்களுக்கான அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்புகள், 231 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அலுவலகங்கள் மற்றும் 15 இதர கட்டிடங்கள் என மொத்தம் 377 கட்டிடங்கள் 356 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எனது தலைமையிலான அரசால் கட்டப்பட்டுள்ளன.

    இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொமாரப்பாளையம், சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பென்னாத்தூர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் மற்றும் சேரன்மாதேவி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி, வேலூர் மாவட்டத்தில் உள்ள நெமிலி மற்றும் பேர்ணாம்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி, மொடக்குறிச்சி மற்றும் தாளவாடி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் மற்றும் மேல்மலையனுார், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் மற்றும் நல்லம்பள்ளி ஆகிய 16 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு 48 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டிடங்கள் கட்ட நான் உத்தரவிட்டுள்ளேன்.

    மக்களை நாடி அரசு என்ற எனது தலைமையிலான அரசின் கொள்கைக்கேற்ப, மக்களை நாடி வருவாய்த்துறையின் சேவை அதிவிரைவாக கிடைத்திடும் வகையில், கடந்த 5 ஆண்டுகளில், 9 புதிய கோட்டங்களும், 65 புதிய வட்டங்களும் (தாலுகாக்கள்) ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில், கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் தாலுகாவை பிரித்து ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு புதிய தாலுகா, அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் தாலுகாவினை பிரித்து ஆண்டிமடத்தில் ஒரு புதிய தாலுகா, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் தாலுகாவை பிரித்து கூத்தாநல்லூரில் ஒரு புதிய தாலுகா, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் தாலுகாக்களை சீரமைத்து கயத்தாரில் ஒரு புதிய தாலுகா, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தாலுகாவினை பிரித்து சிங்கம்புணரியில் ஒரு புதிய தாலுகா என மொத்தம் 5 புதிய தாலுகாக்கள் உருவாக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இதற்கென 4 கோடி ரூபாய் செலவு ஏற்படும். என்னால் அறிவிக்கப்பட்ட இத்திட்டங்களினால் பொதுமக்களுக்கு வருவாய்த்துறையினரின் சேவை விரைந்து கிடைக்கவும், வருவாய்த்துறையினர் தங்கள் சேவையை எளிதாகவும், விரைவாகவும், திறம்படவும் பொதுமக்களுக்கு வழங்கவும் வழி ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×