search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் பாதுகாப்புடன் பஸ்-ரெயில்கள் ஓடியது: அரசு அலுவலகங்கள் செயல்பட்டன
    X

    போலீஸ் பாதுகாப்புடன் பஸ்-ரெயில்கள் ஓடியது: அரசு அலுவலகங்கள் செயல்பட்டன

    சென்னை சென்ட்ரல், எழும்பூர் நிலையங்களில் இருந்து ரெயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றன. அரசியல் கட்சிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினாலும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
    சென்னை:

    கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு மூலம் அரசியல் கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    போராட்டம் நடைப்பெற்றாலும், பஸ் ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம் போல இயக்கப்பட்டன.

    சென்னை சென்ட்ரல், எழும்பூர் நிலையங்களில் இருந்து ரெயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றன. அரசியல் கட்சிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினாலும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.

    சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவு வாசல்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    மின்சார ரெயில்களும் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம் போல் ஓடின.

    சென்னையில் மாநகர பஸ்கள் அனைத்தும் இன்று இயக்கப்பட்டன. எல்லா வழித்தடங்களிலும் வழக்கம் போல பஸ்கள் சென்றன.

    மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3865 பஸ்கள் இயக்கப்படுகிறது. இவை அனைத்தும் முழுமையான அளவு இயக்கப்பட்டதாக போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் முழுமையாக ஓடவில்லை என்றாலும் ஓரளவிற்கு இயக்கப்பட்டன.

    பள்ளி வாகனங்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. அரசின் உத்தரவை ஏற்று ஒரு சில பள்ளிகள் செயல்பட்டன. எழும்பூர், புரசைவாக்கம், கொளத்தூர், பெரம்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பல இடங்களில் இன்று பள்ளிகள் இயங்கியதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர்.

    ஆட்டோ, வேன்கள் ஓடாததால் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர். பள்ளிக்கு சொந்தமான வாகனங்களிலும் மாணவ -மாணவிகள் சென்றனர். அரசு பள்ளிகள் முழுமையாக செயல்பட்டன. ஆனால் மாணவர்கள் குறைந்த அளவில் சென்றனர்.

    சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு பகுதியில் உள்ள ஓட்டல்கள் திறந்து இருந்தன. அவை பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருந்தது.

    அரசு அலுவலகங்கள் அனைத்து செயல்பட்டன. ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×