என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலஅதிர்வு பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தனர்.
    X
    நிலஅதிர்வு பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தனர்.

    விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தில் திடீர் நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்

    விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் நில அதிர்வு மக்களை விடிய, விடிய தூங்க விடாமல் பீதிக்குள்ளாக்கியது.
    கடலூர்:

    விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் நில அதிர்வு மக்களை விடிய, விடிய தூங்க விடாமல் பீதிக்குள்ளாக்கியது.

    இன்று காலையில்தான் இந்த 3 மாவட்ட மக்களிடம் நிம்மதியை காண முடிந்தது. இந்த நில அதிர்வு பற்றிய விபரம் வருமாறு:-

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது பெரவலூர் கிராமம். நேற்று நள்ளிரவில் பொதுமக்கள் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். 1 மணி அளவில் திடீரென்று அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது.

    வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. கட்டில், பீரோக்கள் அதிர்ந்தன. இதனால் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்து எழுந்து வெளியே ஓடிவந்தனர்.

    இதேபோல் விருத்தாசலம் அருகே இருமனூர், வடவாதி, மங்கலம்பேட்டை ஆகிய பகுதிகளிலும் நள்ளிரவு 1 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

    நில அதிர்வு காரணமாக அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. வீட்டின் பின்னால் கட்டியிருந்த ஆடு-மாடுகள் சத்தமிட்டன. நாய்கள் ஊளையிட்டுக்கொண்டு ஓடின.

    வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தனர். அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் அனைவரும் திரண்டனர். ஆடு-மாடுகளையும் அங்கு கொண்டு வந்தனர்.

    விடிய விடிய மைதானத்திலேயே தூங்காமல் காத்திருந்தனர். மீண்டும் நில அதிர்வு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இருந்தனர்.

    இதேபோல் திட்டக்குடி பகுதியிலும் நேற்று இரவு 1 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் இந்த அதிர்வை உணர்ந்தனர்.

    நிலஅதிர்வு காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொதுமக்கள் தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்து விடுவித்தனர்.

    திட்டக்குடி மேலவீதி, கோழியூர், ஆவினன்குடி, எறையூர், மாப்புடையூர், சிறுமங்கலம், ராமநத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தூங்காமல் அச்சத்தில் விழித்திருந்தனர்.

    திட்டக்குடி கீரைக்கார தெருவைச் சேர்ந்த வேல்சிங் (வயது 40) என்பவர் வீட்டில் நில நடுக்கத்தால் விரிசல் ஏற்பட்டது.

    திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் நள்ளிரவில் போலீசார் அமர்ந்திருந்தனர். நிலநடுக்கத்தால் அந்த கட்டிடமும் அதிர்ந்தது. இதனால் போலீசார் அங்கிருந்து வெளியேறினர்.

    இது குறித்து விருத்தாசலம் கோட்டாட்சியர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து திட்டக்குடி, விருத்தாச்சலம் பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும்படி அறிவுறுத்தினார்.

    தாசில்தார்கள் பன்னீர் செல்வம், ரவி மற்றும் அதிகாரிகள் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்றனர். பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினர்.

    மங்கலம்பேட்டை, ஆலடி, திட்டக்குடி, சிறுப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும் அதிகாரிகள் சென்றனர். பொதுமக்களிடம் அச்சம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    இன்று காலை 6 மணிக்கு மேல் அந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது. பின்னர் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று இரவு நிலஅதிர்வு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலஅதிர்வினால் வீடுகள் குலுங்கின. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது. 10 விநாடிகள் நிலஅதிர்வு நீடித்தது.

    விழுப்புரம், காணை, எலவனாசூர்கோட்டை, குரும்பூர், காட்டுநெமிலி, நாச்சியார்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

    அந்த பகுதியில் உள்ள மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். அச்சத்தில் விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.

    பாறைகள் அதிகம் நிறைந்து காணப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த நில அதிர்வை நன்கு உணர்ந்ததாக பொதுமக்கள் பீதியுடன் தெரிவித்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 1.8 என பதிவாக இருந்ததாக கூறப்படுகிறது.

    நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். குறிப்பாக பெரம்பலூர், வேப்பந்தட்டை, எறையூர், லெப்பை குடிக்காடு, குன்னம் ஆகிய பகுதிகளில் திடீரென இறைச்சல் போன்ற பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

    சுமார் 5 முதல் 7 விநாடிகள் வரை இது உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் அதிக சத்தம் கேட்டதாகவும், லேசான அதிர்வு இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    குறிப்பாக அதிக கிராமங்களை உள்ளடக்கிய வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள தொண்டப்பாடி, வாலி கண்டபுரம், துறைமங்கலம், வயலப்பாடி, ஓலப்பாடி, திருமாந்துறை, எறையூர் ஆகிய கிராமங்களிலும், குன்னம், லெப்பைகுடிக் காடு பகுதிகளில் இந்த நில அதிர்வை நன்கு உணர்ந்ததாக பொதுமக்கள் கூறினர். இதனால் அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய, விடிய சாலைகளில் விழித்திருந்தனர்.

    இந்த நில அதிர்வு அதிகபட்சம் 15 விநாடிகள் வரை உணரப்பட்டதாக பொது மக்கள் பீதியுடன் தெரிவித்தனர்.

    இதில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவரது வீட்டில் சுவரில் விரிசல் விழுந்தது.

    கடந்த 1982-ம் ஆண்டு மற்றும் 2012-ம் ஆண்டுகளில் பகல் 3 மணியளவில் இதை விட சற்று கூடுதலான அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது 3-வது முறையாக இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அதிக அளவில் பீதியடைந்து உள்ளனர்.
    Next Story
    ×