search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
    X

    2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருவதால் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    ஆலந்தூர்:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகிறார். அவர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் செல்கிறார்.

    குன்னூரில் நடைபெறும் ராணுவ விழாவில் கலந்துகொண்டு விட்டு மாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார்.

    விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் காரில் ராஜ்பவன் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார். இரவு 7 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து காரில் பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு ஜனாதிபதி வருகிறார். அங்கு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு இரவு 9 மணிக்கு மீண்டும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    2-வது நாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 6.40 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு வருகிறார். அங்கு ராணுவ பயிற்சி முடித்துவிட்டு பணிக்கு செல்லும் அதிகாரிகள் விழாவில் கலந்துகொள்கிறார்.

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மதியம் 12 மணிக்கு பரங்கிமலையில் இருந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கும் வங்கி விழாவில் கலந்துகொள்கிறார். மதியம் 1.45 மணிக்கு விழாவை முடித்துக்கொண்டு மதியம் 2.15 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்துக்கு வந்து சேருகிறார்.

    அங்கு வழியனுப்பு விழா நடக்கிறது. அதன்பின்னர் மதியம் 2.20 மணிக்கு தனி விமானத்தில் பிரணாப் முகர்ஜி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு டெல்லியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு சிறப்பு படையை சேர்ந்த 40 அதிகாரிகள் சென்னை வந்தனர். அவர்கள் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இடங்கள், விமான நிலையம், ராணுவ பயிற்சி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சிறப்பு படை அதிகாரிகள், விமான நிலைய ஆணையக அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிற்படை அதிகாரிகள், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

    ஜனாதிபதி வருகையின் போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. ஜனாதிபதி வருகைக்காக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இதேபோல் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகைக்கும், கிண்டியில் இருந்து பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்துக்கும் ஜனாதிபதி வந்து செல்லும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.
    Next Story
    ×