என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த என்ஜினீயர் கைது
    X

    பெருந்துறை அருகே தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த என்ஜினீயர் கைது

    பெருந்துறை அருகே தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை, பழைய பஸ் நிலையம் ரோடு, முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ராசு என்ற சந்திரசேகரன். தொழில் அதிபர்.

    இவர் பெருந்துறை போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அரசின் முறையான அனுமதி பெற்று பெருந்துறையை அடுத்துள்ள தென்முகம் வெள்ளோடு, உலகபுரம் பகுதியில் கிராவல் மண் எடுத்து தொழில் செய்து வந்தேன். தற்போது இந்த தொழிலை நிறுத்தி விட்டேன்.

    இந்த நிலையில் பெருந்துறை, காஞ்சிக்கோவில் ரோடு, தாஸ்கண்ட் வீதியை சேர்ந்த என்ஜினீயர் நந்தகுமார் என்பவர் நான் சட்ட விரோதமாக கிராவல் மண் வெட்டியெடுத்து விற்பனை செய்வதாக ஊர் மக்கள் அனுப்பியது போல் அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் மனு கொடுத்துள்ளார்.

    மேலும் தன்னை நேரில் சந்தித்தும், போனில் தொடர்பு கொண்டும் தனக்கு ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் புகார் கொடுத்து தொழில் செய்ய முடியாமல் தடுத்து விடுவேன் என்றும் மிரட்டினார்.

    நான் சட்ட விரோதமாக எந்த தொழிலும் செய்யவில்லை, எனவே பணம் தரமுடியாது என கூறினேன். மேலும் இது தொடர்பாக ஈரோடு எஸ்பி-யிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினேன். இது பற்றி தெரிந்து கொண்ட நந்தகுமார் எனது வீட்டுக்கு வந்து என்னை பற்றி புகார் கொடுக்கிறாயா? உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி என்னை தாக்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் என்ஜினீயர் நந்தகுமாரை கைது செய்து பெருந்துறை கோர்ட்டில் ஒப்படைத்தார். வழக்கினை விசாரித்த நீதிபதி ரெய்கானா பர்வீன் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
    Next Story
    ×