என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் கோவிலுக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை
    X

    மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் கோவிலுக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை

    முன்விரோதத்தில் கோவிலுக்கு தீ வைக்கப்பட்டதால் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மாப்படுகை காவிரி ஆற்றங்கரை பகுதியில் தமிழ்செல்வன் (வயது 50) என்பவர் குறி சொல்லி வருகிறார். இவர் அப்பகுதியில் பஞ்ச முக மஞ்சள் மாரியம்மன், அதர்வன காளி, மாட கருப்பன்னசாமி, தாலி காத்த ஆதிமகா மாரியம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்து நன்கொடை வசூலித்து தற்போது கோவில் கட்டி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று 3 மணியளவில் பஞ்சமுக மஞ்சள் மகாமாரியம்மன் சிலை மீது சார்த்தப்பட்டிருந்த புடவைகள் தீப்பற்றி எரிந்தது. மேலும் கோவில் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்தன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அதே நேரத்தில் தங்களைத் தாக்கி மோட்டார் சைக்கிள்களை பிடுங்கிச்சென்றதாக வேல்முருகன், பாலமுருகன் ஆகியோர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் கூறியதாவது:-

    கடந்த 6-ம் தேதி மயிலாடுதுறை ஹாஜியா நகரை சேர்ந்த சத்தியராஜ் (27) என்பவர் கோவிலில் குறி சொல்லும் தமிழ்செல்வனிடம் குறி சொல்லி ஏமாற்றுவதாக கூறி தகராறு செய்துள்ளார். அப்போது தமிழ்ச்செல்வன் அவரது ஆதரவாளரான வேதம்பிள்ளை காலனியை சேர்ந்த கணபதி மற்றும் சிலருடன் சேர்ந்து சத்தியராஜை தாக்கி உள்ளனர்.

    இந்த முன்விரோதம் தொடர்பாக சத்தியராஜ், அவரது நண்பர் ஆல்பர்ட், ரூபன் இருவரும் சேர்ந்து கணபதியின் அண்ணன் மகன்கள் வேல்முருகன் (21), பாலமுருகன் (22) ஆகியோரை காவிரி மேம்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்தபோது வழிமறித்து தாக்கி, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை பறித்துக்கொண்டு குறி சொல்லும் இடமான மாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர். அங்கு சூலத்தை சேதப்படுத்தியும், மஞ்சள் முக மாரியம்மன் மேல் சார்த்தப்பட்டிருந்த புடவைகளை தீவைத்து கொளுத்திவிட்டு, கொண்டு வந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் தீ வைத்து கொளுத்தியதும் தெரியவந்தது.

    முன்விரோதம் தொடர்பாக சுவாமி சிலைக்கு தீ வைத்து எரித்த இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×