search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

    சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    நாட்டின் 70-வது சுதந்திர தினத்தையொட்டியும், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கி 75-வது ஆண்டு ஆவதை முன்னிட்டும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குமரி மாவட்டத்தில் இருசக்கர வாகன பேரணி நடந்து வருகிறது.

    நாகர்கோவிலில் இன்று நடந்த அவர் பேரணியில் கலந்து கொண்டார். வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில் முன்பிருந்து தொடங்கிய பேரணியில் அவர் பங்கேற்றார்.

    இதில் பாரதீய ஜனதா மூத்த நிர்வாகி எம்.ஆர். காந்தி, நகரசபை தலைவி மீனாதேவி மற்றும் நிர்வாகிகள் ராஜன், வேல்பாண்டியன், முத்துராமன், தேவ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு கவுரவத்தை தேடி தந்துள்ள வீராங்கனை சாக்சி மற்றும் பதக்கத்தை உறுதி செய்துள்ள வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு இந்தியனும் இவர்களை பாராட்ட வேண்டும். பதக்கம் கிடைத்தது மகிழ்ச்சி தான் என்றாலும் அதில் முதல் நிலை பதக்கம் கிடைக்க வேண்டும். பிரதமர் மோடியும் இவர்களை பாராட்டி உள்ளார்.

    கர்நாடக அரசு அங்கு மழை பெய்யும்போது கிடைக்கும் தண்ணீரை தமிழகத்துக்கு அளிக்கிறது. அவ்வாறு அளிக்கும் நீரை தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தந்து விட்டதாக கூறுகிறார்கள். பஞ்சம் ஏற்படும்போது இருக்கும் தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும். நமது உரிமைகளை கர்நாடக அரச தர மறுக்கிறது.

    காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக விவசாயிகள் வருகிற 30-ந்தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது நியாயமான போராட்டம். இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பது பற்றி பாரதீய ஜனதா கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதை வரவேற்கிறேன்.

    டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் இன்று போராட்டம் நடத்துகிறார்கள். இந்த பிரச்சினையும் நியாயமான காரணத்துக்காகவே நடக்கிறது.

    தமிழக சட்டசபை சபாநாயகரின் உருவப்பொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் அநாகரீகமானதாகும். இதுபோல சட்டமன்றத்தில் இருந்து தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்ட சம்பவத்தையும் தவறு என்றே கூறுவேன். சட்டமன்றத்தில் நடப்பது எல்லாமே தவறாகத்தான் இருக்கிறது. மக்கள் இவற்றை புரிந்து கொள்வதற்காக சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். அப்போது தான் யார் தவறு செய்தார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள முடியும்.

    எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்.

    சபரிமலையில் அய்யப்பன் கோவில் நடையை தினமும் திறந்து வைக்க வேண்டும். அங்கு வி.ஐ.பி. தரிசனத்துக்கு தனிக்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறியதை ஏற்க இயலாது. ஒவ்வொரு கோவிலுக்கும் அதற்கென தனி ஆச்சாரங்கள் உண்டு. அவர்கள் வழிபாடுகள் நடத்தும் உரிமையில் தலையிட உரிமையில்லை.

    ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு தவறு செய்த அதிகாரிகள் மீது ஆந்திர அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரப்பன் வழக்கில் கைதான குற்றவாளிகள் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ராஜீவ் கொலை வழக்கில் ஆரம்பத்திலேயே குளறுபடிகள் இருப்பதாக நாங்கள் கூறி வந்தோம் என்பதை இப்போது தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×