search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திர தினத்தில் கூடுதல் விலைக்கு விற்பனையான மதுக்கள்
    X

    சுதந்திர தினத்தில் கூடுதல் விலைக்கு விற்பனையான மதுக்கள்

    சுதந்திர தினத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து 2 மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
    சென்னை:

    காந்திஜெயந்தி, சுதந்திர தினம், திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, மிலாது நபி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம்.

    ஆனால் இதுபோன்ற நாட்களில் தமிழகம் முழுவதுமே திருட்டுத்தனமாக மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்றால் முந்தைய நாளே மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது.

    நேற்று முன்தினம் ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து 2 மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், டாஸ்மாக் கடைகளின் அருகிலேயே மறைவான இடங்களில் வைத்து மதுவிற்பனை நடந்தது.

    ரூ.90 மற்றும் 105 விலை கொண்ட மதுபாட்டில்கள் மட்டுமே இருப்பதாக கூறி 2 மடங்கு கூடுதல் விலைக்கு அவைகளை விற்பனை செய்துள்ளனர். அந்தந்த பகுதிகளில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதில் குறிப்பிட்ட நபர்களே ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் யார்-யார்? என்பது போலீசுக்கு தெரியும். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

    இதுபோன்ற திருட்டுத்தனமான மதுவிற்பனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட எல்லா நாட்களிலுமே நடக்கிறது. பெயரளவுக்கு மட்டுமே அவ்வப்போது போலீசார் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்றும் பொதுமக்கள் புகார் கூறினர்.

    அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்பட்ட பின்னர் பார்களில் வைத்து அதிகாலையிலேயே மதுவிற்பனை வெளிப்படையாகவே நடைபெறுகிறது. இதனால் அதிகாலையில் பல டாஸ்மாக் கடைகளின் முன்பு கூட்டம் அலைமோதுகிறது.

    இதனையும் போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×