search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு குறித்து மேனகா காந்தி தான் கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்
    X

    ஜல்லிக்கட்டு குறித்து மேனகா காந்தி தான் கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

    ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய மந்திரி மேனகாகாந்தி தான் கூறிய கருத்தை திரும்பபெற வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய மந்திரி மேனகாகாந்தி தான் கூறிய கருத்தை திரும்பபெற வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் பாரம்பரிய கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் உச்ச நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. ஜல்லிக்கட்டுக்கான தடை உத்தரவு நீக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் ஜல்லிக்கட்டு என்றால் என்ன? எப்படி நடத்தப்படுகிறது? என்று எந்த விவரமும் தெரியாமல் ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தலின் படி தமிழகத்தின் அனைத்து இயக்கங்களும் ஒற்றுமையுடன் ஜல்லிக்கட்டை நடத்த போராடி வரும் நிலையில், இது ஆபத்தான விளையாட்டு என்று இந்த வீர விளையாட்டை பற்றி தெரியாதவர்கள் தொடர்ந்து குறை கூறிக்கொண்டு வருவதிலிருந்தே அவர்கள் அனைவரும் தமிழரின் உணர்வை மதிக்கத்தவறியவர்கள் என்று தெரிகிறது. தமிழ் இனத்திற்கு விரோதமாக, தமிழர்களின் உணர்வை புண்படுத்தும் நோக்கில் மத்திய மந்திரி மேனகாகாந்தி போன்று சிலர் செயல்பட்டு வருவதனாலேயே உச்ச நீதிமன்றத்தில் இன்னும் வழக்கு நிலுவையில் உள்ளது.

    ஜல்லிக்கட்டு வீரத்தின் வெளிப்பாடாகவும், நம்முடைய கலாசாரத்தின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது. ஆதலால் இந்த வீர விளையாட்டில் காளைகள் எந்த விதத்திலும் துன்புறுத்தப்படுவதில்லை. ஸ்பெயின் போன்ற மேலை நாடுகளில் காளைகளை ஈட்டியால் குத்திக் கொல்லும் போட்டியில் காளைகளுக்கும் ஆபத்து, எதிர்த்து நிற்பவர்களுக்கும் ஆபத்தே தவிர நம்முடைய வீர விளையாட்டில் ஆபத்து இல்லை.

    எத்தனையோ கலாசார அடையாளங்களை இழந்து, எஞ்சி நிற்கும் ஜல்லிக்கட்டை வாழும் காலத்தில் இழந்துவிடக்கூடாது என்று தவிக்கும் தமிழ் மக்களின் உணர்வை, வீர இளைஞர்களின் செயல்திறனை தரம் தாழ்த்தும் எந்த சொல்லும் தவறானதே. எனவே மத்திய மந்திரி மேனகாகாந்தி தாம் கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×