search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சரின் பேச்சுக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு: தமிழக சட்டசபையில் கடும் அமளி
    X

    அமைச்சரின் பேச்சுக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு: தமிழக சட்டசபையில் கடும் அமளி

    அமைச்சரின் பேச்சுக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக சட்டசபையில் கடும் அமளி நிலவியது. இதனால் 50 நிமிடம் சபை முடங்கியது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.

    விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர் தொகுதி) பேசினார்.

    தனது பேச்சின் தொடக்கத்தில், தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார். கன்னிப்பேச்சு என்றாலும் குறிப்பு எதுவும் இல்லாமல் சரளமாக பேசினார்.

    அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

    உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி:- அமைப்புசாரா தொழிலாளர்கள் பணியின்போது விபத்து ஏற்பட்டு இறந்தால் ரூ.5 லட்சமாக இழப்பீடு தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் 110 விதியின் கீழ் பேரவையில் அறிவித்தார். ஆனால், விபத்து ஏற்பட்ட இடத்தில் இறந்தவர்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறப்பவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படுவதில்லை. எனவே, அவர்களுக்கும் வழங்க வேண்டும். சாயக்கழிவு பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.200 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    அமைச்சர் கருப்பண்ணன்:- 2010-2011-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் திருப்பூரில் சாயப்பட்டரை ஆலைகள் மூடப்பட்டன. இதனால், 1½ லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். முதல்- அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, சாயப்பட்டரை பிரச்சினையை தீர்க்க ரூ.200 கோடி வட்டியில்லாமல் கடன் வழங்கினார்.

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி:- ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் முறையாக வழங்கப்படவில்லை.

    அமைச்சர் நிலோபர் கபில்:- 60 வயது சரியாக முடிந்திருந்தால் தான் ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுவதற்காக வயது ஆதாரங்களை வழங்கும்போது, சிலரது ஆதாரங்களில் முரண்பாடு உள்ளது. எனவே, அதுகுறித்து விசாரணை நடத்த கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி:- கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் நலிவடைந்துள்ளது. அதன் கடைகளும் 500-ல் இருந்து 200 ஆக குறைந்துள்ளது.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- கோ-ஆப் டெக்ஸ் விற்பனையகம் ஒன்று கூட அடைக்கப்படவில்லை.

    (இந்த நேரத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கன்னிப்பேச்சு பேசும் உறுப்பினரின் பேச்சில் அமைச்சர்கள் குறுக்கீடு இருக்க கூடாது என்று தெரிவித்தனர்)

    சபாநாயகர் ப.தனபால்:- கைத்தறி மானியத்தில் பேசும் உறுப்பினருக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அந்த துறை அமைச்சர் பதில் அளிக் கலாம். அது அவரது கடமை.

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி:- காஞ்சீபுரம் பட்டு சேலையின் தரம் குறைந்துள்ளது.

    இந்த நேரத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எழுந்து விளக்கம் அளிக்க முயன்றார். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அந்த நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார்.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- எங்கள் கட்சி உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது கன்னிப்பேச்சின் தொடக்கத்திலேயே அமைச்சர்களின் குறுக்கீடு வேண்டாம் என்றார். மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கும் முன்பு அமைச்சர் பேசும்போது, மானியக் கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிறைவாக பதில் அளிக்கிறேன் என்று கூறினார். எங்கள் கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கவில்லை. கோரிக்கை தான் வைத்தார்.

    அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்:- உறுப்பினர் பேசும்போது காஞ்சீபுரம் பட்டு தி.மு.க. ஆட்சியில் வெள்ளி இழையில் தங்க முலாம் பூசப்பட்டு தரமாக தயாரிக்கப்பட்டதாகவும், இப்போது பித்தளை நூலிழையில் தரம் குறைந்ததாக தயாரிக்கப்பட்டதாகவும் கூறினார். அதற்கு அமைச்சர் உரிய பதில் அளிக்க முயல்கிறார். அதற் கான காரணத்தை அமைச்சரே கூறுவார். பொறுமையாக கேளுங்கள்.

    எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்:- உறுப்பினரின் கேள்விக்கு உடனே எழுந்து பதில் சொல்ல வேண்டுமா?. ½ மணி நேரம் கழித்து சொன்னால் என்ன?.

    (இந்த நேரத்தில் மேலும் ஒரு கருத்தை துரைமுருகன் கூறினார். அதை சபாநாயகர் ப.தனபால் அவைக்குறிப்பில் இருந்து உடனே நீக்கினார்)

    அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- தமிழகத்தில் உள்ள பட்டில் 2 வகை உள்ளது. ஒன்று சுத்தமான பட்டு. இன்னொன்று பட்டு மாதிரி இருக்கும் ஆனால் பட்டு கிடையாது. எனவே, பட்டு உண்மையானதா? என்பதை பரிசோதனை செய்துகொள்ளும் கூடம் காஞ்சீபுரத்திலேயே உள்ளது. எனவே, தரத்தை தெரிந்துகொண்டுதான் வாங்குகிறார்கள்.

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி:- காஞ்சீபுரத்தில் பட்டுப்பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- காஞ்சீபுரத்தில் பட்டுப்பூங்கா அமைப்பதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டன. அடிக்கல் நாட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

    இந்த நேரத்தில் உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீண்டும் காஞ்சீபுரம் பட்டுப்பூங்கா குறித்து பேச முயன்றார்.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- தா.மோ.அன்பரசன் எழுதி கொடுத்ததைத்தான் உறுப்பினர் இங்கே படிக்கிறார். பட்டுப்பூங்கா அமைப் பதற்கான பணிகள் முடி வடைந்துவிட்டன.

    (அமைச்சரின் இந்த பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினர்.)

    சபாநாயகர் ப.தனபால்:- தான் தயாரித்து வந்ததை வைத்துத்தான் உறுப்பினர் இங்கே பேசுகிறார். எனவே உறுப்பினர் தொடர்ந்து பேசட்டும்.

    (ஆனாலும், சபாநாயகரின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தொடர்ந்து வலியுறுத்தினர்.)

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- எங்கள் கட்சி உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உறுப்பினர் தா.மோ.அன்பரசன் எழுதி கொடுத்ததைத்தான் படிக்கிறார் என்று அமைச்சர் கூறினார். நான் கேட்கிறேன். அதிகாரிகள் எழுதி கொடுத்ததைத்தான் அமைச்சர்கள் படிக்கிறார் களா?. எனவே, அமைச்சர் கூறிய கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

    (இந்த இடத்தில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்தார்)

    அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்:- இதே அவையில் தி.மு.க. ஆட்சியில் மு.க. ஸ்டாலின், ஒரு உறுப்பினரின் பேச்சுக்கு எதிர்தரப்பில் இருந்து பதில் வந்து அதுவும் அவையில் பதியவைத்தால், அவை குறிப்பில் இருந்து எதையும் நீக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

    எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்:- என்னை ஒருவன் அடித்தால், நீங்களும் (சபாநாயகரும்) வந்து அடித்துவிட்டு, இரண்டும் சரியாக போய்விட்டது என்பது போல் உள்ளது. நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

    சபாநாயகர் ப.தனபால்:- எதிர்க்கட்சி தலைவர், முதல்-அமைச்சர் பற்றி கூறிய வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.

    (இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

    சபாநாயகர் ப.தனபால்:- நான் கூறிய தீர்ப்பை மாற்ற முடியாது. எனது தீர்ப்பின் மீது மேலும் நீங்கள் பேச முடியாது.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- உங்கள் தீர்ப்பை நான் விமர்சிக்கவோ, அதுகுறித்து பேசவோ தயாராக இல்லை. நீங்கள் உத்தரவு போட்டிருக்கிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    ஆனால், திடீரென்று என்னுடைய உரையை மட்டும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது என்பது, நான் சொன்னதை மட்டும் எடுத்துவிட்டு, அமைச்சர் சொன்னதை மட்டும் எடுக்கவில்லை என்று சொன்னால், அதை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதுதான் எங்களுக்கு இருக்கக் கூடிய சந்தேகம். தயவுகூர்ந்து அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதுதான் முறையாக இருக்கும். எனவே, தவறான ஒரு முறையை இந்த அவையிலே பதிவு செய்ய வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    சபாநாயகர் ப.தனபால்:- முதல்-அமைச்சர் என்ற வார்த்தையை தான் நீக்கினேன். நீங்கள் கூறிய மற்ற வார்த்தைகள் அவை குறிப்பில் இருக்கும்.

    (ஆனாலும் சபாநாயகரின் விளக்கத்தை ஏற்காத தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் - குழப்பம் நீடித்தது)

    சபாநாயகர் ப.தனபால்:- நான் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. அவையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்.

    (இந்த நேரத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச எழுந்தார். ஆனாலும், தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்)

    சபாநாயகர் ப.தனபால்:- அமைச்சரின் பதில் உரையை நீங்கள் வேண்டுமென்றே புறக்கணிக்க பார்க்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு பேசினாலும் எனது தீர்ப்பு மாறாது. அவையின் நேரத்தை நீங்கள் வீணடிப்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    கொஞ்சமாவது விதியை பின்பற்றுங்கள். உங்கள் இருக்கையில் அமருங்கள். உங்கள் கட்சி உறுப்பினர் தா.மோ.அன்பரசன் பகல் 11.28 மணி முதல் 12.29 மணி வரை பேசினார். அடுத்து பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதியம் 1.28 மணி முதல் 2.30 மணி வரை பேசியுள்ளார். ஆனால், அ.தி.மு.க. உறுப்பினர்கள் 3 பேர் ஒரு மணி நேரத்திற்குள் பேசியுள்ளனர். எனது தீர்ப்பு பற்றி பேச யாருக்கும் அனுமதி இல்லை. அவையை சமமாகத்தான் நடத்துகிறேன். தி.மு.க. உறுப்பினர்களுக்கு இவ்வளவு வாய்ப்பு கொடுத்த பிறகும் என்னை நீங்கள் நிர்ப்பந்தம் செய்கிறீர்கள். நீங்கள் சொல்வது போன்று அவையை நடத்த முடியாது. எனக்கு விதிகள் தெரியும். நீங்கள் யாரும் எனக்கு சொல்லித்தர வேண்டாம். இதோடு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- இன்று அமைச்சர் பேசியது அவைக் குறிப்பில் இருக்கும்போது நான் பேசியதும் அவை குறிப்பில் இருக்க வேண்டும்.

    சபாநாயகர் ப.தனபால்:- முதல்-அமைச்சர் பற்றி பேசியது அவைக்குறிப்பில் இருக்காது.

    (இந்த நேரத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பிய கூச்சல்-குழப்பத்திற்கு மத்தியில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பேசினார்கள். தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டனர்)

    சபாநாயகர் ப.தனபால்:- இது நியாயமா?. உங்கள் கட்சி உறுப்பினர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். எதிர்க் கட்சி தலைவர் ஒத்துக்கொள்கிறீர்களா?.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- சில வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது, நீக்கப்படாதது ஆகிய நேரங்களில், தொடர்ந்து இதுபோன்ற நிலை அடிக்கடி இங்கே வருகின்றபோது, பிரச்சினை எழுகிறது. இந்த அவையில் இது தான் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆகவே, அமைச்சர் பேசியது அவைக்குறிப்பில் இருக்கும்போது, நான் பேசியது ஏன் அவைக்குறிப்பில் இருக்கக்கூடாது என்பதுதான் இங்கே என்னுடைய கேள்வி.

    நான் இப்போதும் சொல்கிறேன், தொடர்ந்து இன்று மாலை 7 மணி, 8 மணி என தொடர்ந்து விடிய, விடிய அவையை நடத்தினாலும் நாங்கள் தொடர்ந்து இங்கு உட்கார்ந்து, விவாதத்தில் பங்கேற்பதற்கு தயாராக இருக்கிறோம். அதற்காக காத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கென்று சுய மரியாதை உள்ளது. நாங்கள் இந்த அவையின் விதிமுறைப்படித்தான் கேட்கிறோமே தவிர, நீங்கள் அளித்த அதிகார வரம்பை மீறி அல்லது நீங்கள் தந்த தீர்ப்பை மறுத்து பேசுகிறோம் என்று தயவுசெய்து நீங்கள் கருத வேண்டிய அவசியமில்லை.

    ஆகவே, சில நேரங்களில் நீங்கள் உரிய முடிவுக்கு வரமுடியாத சூழ்நிலை வருகின்ற நேரத்தில், எங்களுடைய உறுப்பினர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற நிலையில், சில வேண்டத்தகாத வார்த்தைகளை பதிலுக்கு பயன்படுத்த வேண்டிய வாய்ப்பு வருகிறது. நீங்கள் மைக்கை ஆன் செய்யாவிட்டாலும் சில சப்தங்கள் வெளிவருகிறது. அதனால் நீங்கள் வருத்தப்படுகின்றீர்கள். நான் அதற்காக வேதனைப்படுகிறேன், வெட்கப்படுகிறேன், உங்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்ளவும் காத்திருக்கிறேன்.

    ஆனால், அமைச்சரின் பேச்சை தயவுகூர்ந்து அவைக்குறிப்பில் இருந்து நீக்குங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அவர் சொன்ன வார்த்தைகளை நீக்கினால், என்னுடைய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதில் நாங்கள் குறுக்கிட மாட்டோம். அதை நீக்காமல், என்னுடைய பேச்சை மட்டும் நீக்குவதுதான் எங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினை.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:- உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, முதலில் தொகுதி பிரச்சினை பற்றி பேசும்போது நடுநிலையோடுத்தான் பேசினார். பின்னர், தொழிலாளர்கள் பிரச்சினை பற்றி பேசும்போதும் நடுநிலையோடுத்தான் பேசினார். கைத்தறி துறையில் பேசும்போது காஞ்சீபுரம் பட்டுப்பூங்கா பற்றி பேசினார். அதற்கு நான் காஞ்சீபுரம் பட்டுப்பூங்கா பணிகள் முடிந்து அடிக்கல் நாட்ட தயாராக உள்ளது என்று கூறினேன். ஆனாலும் தொடர்ந்து உறுப்பினர் அதுகுறித்து கேள்வி எழுப்பினார். வேண்டுமானால் நான் கூறியதை, தா.மோ.அன்பரசன் சொன்னதை உறுப்பினர் அன்பில் பொய்யாமொழி கூறினார் என்று திருத்திக்கொள்ளவும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×