search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் அருகே பாகன் உள்பட 2 பேரை தாக்கிய கோவில் யானை
    X

    கும்பகோணம் அருகே பாகன் உள்பட 2 பேரை தாக்கிய கோவில் யானை

    கும்பகோணம் அருகே கோவில் யானை தாக்கியதில் பாகன் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் கோமதி என்ற 60 வயது யானை உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக இந்த யானை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. தினமும் கொட்டகையில் இருந்து கோவிலுக்குள் அழைத்து வரப்பட்டு, தண்ணீர் குடித்தவுடன் சிறிது நேரம் கழித்து மீண்டும் கொட்டகைக்கு கொண்டு செல்லப்படும்.

    இந்த நிலையில் யானையின் உடல்நிலை கருதி டாக்டர்களின் ஆலோசனைப்படி தினமும் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக புத்துணர்வு முகாமுக்கும் இந்த யானை அழைத்துச் செல்லப்படுவதில்லை. இந்நிலையில் நேற்று மதியம் யானை கோமதி கோவில் வாசல் பகுதியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சுவிட்ச் ஆப் செய்ய பாகன் தியாகராஜன் சென்றுவிட்ட நிலையில், திடீரென்று கோவிலின் வெளியே யானை ஓடியது. இதனால் கோவில் வாசல் பகுதியில் இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

    அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தியாகராஜன், யானையை பின்தொடர்ந்து ஓடினார். கோவிலில் இருந்து ½ கி.மீ. தூரம் ஓடிய யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தியாகராஜன் முயன்ற போது, யானை அவரை தாக்கியது. மேலும் மல்லியத்தை சேர்ந்த பக்தர் மகேஸ் என்பவரையும் தாக்கியது. இதில் அவர்கள் லேசான காயம் அடைந்தனர். பின்னர் ஒருவழியாக யானை கோமதியை சமாதானப்படுத்தி கொட்டகையில் அடைத்தனர். ஒரு வாரமாக கொளுத்தி வரும் அதிக வெயில் காரணமாகவும், கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதாலும் யானை இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமா சூட்டிங் நடந்த போது நடிகை சந்தியாவை கோமதி யானை தாக்கியது. அதேபோல் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் சேகர் என்பவர் கோமதி யானை தாக்கியதில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×