என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த தமிழக மீனவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை வீரர்கள்
    X

    நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த தமிழக மீனவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை வீரர்கள்

    நடுக்கடலில் படகு பழுதாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோட்டைப் பட்டினம் மீனவர்கள் 3 பேரையும் இலங்கை கடற்பையினர் மனிதாபிமானத்துடன் மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு உணவும் வழங்கி உபசரித்துள்ளனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் 250 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் ரெங்கநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் சுந்தரம் (வயது50), முருகேசன் (40), சூசை (45) ஆகிய 3 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களது விசைப்படகு திடீரென பழுதானது. இதனால் அந்த இடத்தில் இருந்து ஒரு அடி கூட படகை நகர்த்தமுடிய வில்லை. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விசைப்படகு அங்குமிங்கும் அலைக்கழித்தது.

    இதனால் செய்வதறியாது திகைத்த படகில் இருந்த மீனவர்கள் தங்களது வாக்கி டாக்கி மூலம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்கத்திற்கும், மற்ற மீனவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து ஒரு விசைப்படகில் 4 மீனவர்கள் உடனடியாக அவர்களை தேடி புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் கூறிய இடத்தில் படகு எதுவும் பழுதாகி நிற்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர் கள் பழுதான படகில் இருந்த மீனவர்களை தொடர்பு கொள்ளவும் முடியாமல் போனது.

    இதற்கிடையே விசைப் படகு பழுதாகி நின்ற பகுதிக்கு இலங்கை கடற்படையினர் ரோந்து பணி வந்தனர். அவர்கள் மீனவர்களிடம் விசாரித்தபோது காரணம் தெரியவந்தது. உடனே மற்றொரு ரோந்து படகை அங்கு கொண்டுவரச்செய்து பழுதான படகை கயிற்றில் கட்டி இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தமிழக மீனவர்களை ஒரு அறையில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர். மேலும் பழுதான படகினையும் சரிபார்த்து 3 மீனவர்களையும் படகுடன் நேற்று நள்ளிரவில் இந்திய கடல் எல்லையில் கொண்டு வந்து விட்டனர். தொடர்ந்து 3 மீனவர்களும் இன்று காலை கோட்டைப்பட்டினம் வந்து சேர்ந்தனர்.

    இதுகுறித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:-

    நடுக்கடலில் படகு பழுதாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோட்டைப் பட்டினம் மீனவர்கள் 3 பேரையும் இலங்கை கடற்பையினர் மனிதாபிமானத்துடன் மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு உணவும் வழங்கி உபசரித்துள்ளனர்.

    அத்துடன் படகையும் பழுது பார்த்து பத்திரமாக இந்திய கடல் எல்லையில் கொண்டுவந்து விட்டுள்ளனர். இதற்காக இலங்கை அரசுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள் கண்டுகொள்ளாமல் சென்றிருந்தால் 3 மீனவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×