என் மலர்
செய்திகள்

தாம்பரம் விமானப்படை தளத்தில் சேலையூர் போலீசார் விசாரணை
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட ராணுவ விமானம் சிறிது நேரத்திலேயே சென்னை அருகே கடல் பகுதியில் திடீரென மாயமானது.
விமானம் புறப்பட்டுச் சென்ற 16 நிமிடங்களில் விமான கட்டுப்பாட்டு அறையுடன் கொண்டிருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரில் இருந்தும் மறைந்தது.
சென்னைக்கு கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் காணாமல் போனது.
இந்த விமானத்தில் 29 பேர் பயணம் செய்தனர். அவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை. தற்போது விமானப்படை விமானங்களும், போர்க்கப்பல்களும் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
இதனால் தாம்பரம் விமானப்படை விங் கமாண்டர் ஜெகதீப்சிங் நேற்று இரவு சேலையூர் போலீஸ் நிலையம் சென்று உதவி கமிஷனர் பழனிவேலை சந்தித்து முறைப்படி புகார் கொடுத்துள்ளார்.
அதில் மாயமான விமானத்தில் பெண் அதிகாரி உள்பட 29 பேர் இருந்ததாகவும், அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறி உள்ளார். போலீசார் இந்த புகாரை பெற்றுக் கொண்டு முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகாரில் காணாமல் போன 29 பேர் பெயர்கள் மட்டும் குறிப்பிட்டிருந்ததால் அவர்களின் முழு முகவரி மற்றும் விவரங்களை சேகரிக்க சேலையூர் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், இன்று காலை தாம்பரம் விமானப்படை தளத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அவருடன் உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசாரும் உடன் சென்றிருந்தனர். அங்கு அதிகாரிகளை சந்தித்து பெயர், முகவரி விவரங்களை சேகரித்தனர்.
இதில் 16 பேர் பெயர் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
1.பத்சரா– விமானி,
2.நந்தா–விமானி,
3. குணால்–
4.ராஜன்–
5. தீபிகா–
6.சஞ்சீவ்குமார்–
7.விமல்–
8.சாம்பமூர்த்தி,
9.பிரசாத் பாபு,
10.நாகேந்திரராவ்,
11.சேனாபதி,
12.பூபேந்திரசிங்,
13.மகாரானா,
14.சின்னாராவ்,
15.சீனிவாசராவ்
(இவர்கள் விசாகப்பட்டினம் கப்பல் படை ஊழியர்கள்).
16. முத்துக்கிருஷ்ணன்,– கடலோர பாதுகாப்பு படை வீரர் தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூரை சேர்ந்தவர்.






