என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே கரும்பு ஆலை அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்
    X

    விருத்தாசலம் அருகே கரும்பு ஆலை அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்

    விருத்தாசலம் அருகே தனியார் கரும்பு ஆலை அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியில் தனியார் கரும்பு ஆலை அலுவலகம் உள்ளது.

    இந்த கரும்பு ஆலைக்கு கருவேப்பிலங்குறிச்சி, கார்மாங்குடி, நேமம், பேரலையூர், கீரனூர், வல்லம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் கரும்புகளை வெட்டி அனுப்புகின்றனர். அவர்களுக்கு இதுவரை கரும்புக்கான உரிய தொகை வழங்கப்பட வில்லை என தெரிகிறது.

    கரும்பு வழங்கியதற்கான நிலுவை தொகையை உடனே வழங்கக்கோரி 200–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு ஆலை அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அலுவலக வாசல் கதவை மூடி பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சாமினாபாஷா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது உயர் அதிகாரிகளுடன் பேசி கரும்பு நிலுவை தொகையை பெற்று தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இருப்பினும் கரும்பு விவசாயிகள், நிலுவை தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் தருவது பற்றி எழுத்து மூலமாக உறுதிப்பட எழுதி தர வேண்டும் எனக்கூறி மீண்டும் அலுவலக வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ‘2014-15–ம் ஆண்டுக்கான நிலுவைத்தொகை இந்தமாத இறுதிக்குள் தரப்படும். 2015-16–ம் ஆண்டுக்கான கரும்பு நிலுவைத்தொகை வருகிற செப்டம்பர் இறுதிக்குள் வழங்கப்படும் என உதவி மேலாளர் ஜானகிராமன் எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்கினார். இதையடுத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×