என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டலூர் பூங்காவில் நோயால் பார்வை இழந்த தென் அமெரிக்க சிறுத்தையின் வலது கண் அகற்றம்
    X

    வண்டலூர் பூங்காவில் நோயால் பார்வை இழந்த தென் அமெரிக்க சிறுத்தையின் வலது கண் அகற்றம்

    வண்டலூர் பூங்காவில் ‘குளுக்கோமா’ நோயால் பார்வை இழந்த தென் அமெரிக்க சிறுத்தையின் வலது கண் அகற்றப்பட்டது.
    வண்டலூர்:

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ‘ரிக்கி’ என்ற 15 வயது தென் அமெரிக்க ஆண் சிறுத்தை ஒன்று உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த சிறுத்தை ‘குளுக்கோமா’ என்ற கண் நீர் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டதால் படிப்படியாக பார்வை இழந்தது.

    கண்ணில் ஏற்படும் வலியின் மூலம் மனிதர்களால் இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து விடலாம். ஆனால் வனவிலங்குகளுக்கு நோய் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியவருவதால், உரிய முன் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

    கண் நீர் அழுத்த நோயால் பார்வை இழந்த சிறுத்தை ரிக்கிக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக நிபுணர்களின் ஆலோசனை பெறப்பட்டது. அதன்படி சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியம் நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்கள் அந்த சிறுத்தையை நேரடியாக பார்வையிட்டனர்.

    குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் முற்றிவிட்டதால், கண்பார்வை முழுமையாக இழந்த நிலையில், கண் வீக்கத்தினால் ஏற்படும் கடும் வலியை குறைக்கும் பொருட்டு சிறுத்தையின் இரண்டு கண்களையும் அகற்ற நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.

    அதன் அடிப்படையில் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகம்மத் சபியுஸ்மா தலைமையில் பூங்கா விலங்கு மருத்துவர்கள் அடங்கிய அறுவை சிகிச்சை குழு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மூலம் அந்த ஆண் சிறுத்தையின் வலது கண் முழுமையாக அகற்றப்பட்டு, அதை மூடி தையல் போடப்பட்டது. அந்த கண்ணில் இருந்து 12 மில்லி லிட்டர் நீர் அகற்றப்பட்டது.

    அறுவை சிகிச்சைக்கு பின் அந்த சிறுத்தை, பூங்கா மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு நோய் எதிர்ப்பு மருந்துகளும், வலி நிவாரணிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

    அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண் முழுமையாக குணம் அடைந்தவுடன், உரிய பரிசீலனைக்கு பிறகு அந்த சிறுத்தையின் மற்றொரு கண்ணும் ஒரு மாதத்திற்குள் அகற்றப்பட உள்ளது.

    தென்அமெரிக்க சிறுத்தைகள் காட்டில் சுமார் 15 வருடங்கள் வரை உயிர் வாழும். அடைப்பிடத்தில் 20 வருடங்கள் வரை வாழும். இந்த அறுவை சிகிச்சை மூலம் வாழ்வின் இறுதிப்பகுதியை அமைதியுடன், வலி இன்றி கழிக்க அந்த சிறுத்தைக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    பார்வை குறைபாடு ஏற்பட்ட ஆரம்ப நிலையில் இருந்து அதற்கு தகுந்தவாறு வாழ பழகிக்கொண்டதால் பார்வை இழந்த கண்களை அகற்றுவதால் அந்த சிறுத்தையின் அன்றாட நடவடிக்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படாது.

    வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×