என் மலர்
செய்திகள்

கட்சிக்கு துரோகம் செய்தால் பூஜ்யமாகி விடுவார்கள்: அமைச்சர் கருப்பணன்
கோபி:
கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
வரும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றி கனியை முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதிமுக வேட்பாளருக்கு துரோகம் செய்து யார் எதிர்த்து நின்றாலும் அவர்கள் கட்சியை விட்டு 10 ஆண்டு காலத்திற்கு நீக்கப்படுவார்கள். பிறகு அவர்கள் கட்சியில் பூஜ்யமாகி விடுவார்கள்.
நாம் இந்த அளவிற்கு பதவி உயர்விற்கு காரணமே முதல்வர் ஜெயலலிதாதான். அவர் 24 மணி நேரமும் தொணடர்களுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்துக் கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு அவர்தான் முதல்வர்.
தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தி அனைத்து தரப்பினருமே பயன்பெற்றுள்ளனர். குறிப்பாக சொல்லப்போனால், ஈ, எறும்பு வரை இன்னும் பல ஜீவராசிகள் முதல்வரின் திட்டத்தினால் பயனடைந்துள்ளன. 6-வது முறையாக தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முத்தான 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டதின் மூலம் தமிழக மக்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்று விட்டார். எனவே அதிமுக தொண்டர்கள் அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் வீடு வீடாக எடுத்துச் சொல்லி 100 சதவீதம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






