என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணாடத்தில் ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை
    X

    பெண்ணாடத்தில் ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை

    பெண்ணாடத்தில் ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் ரெயில் நிலைய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (வயது 30) ரெயில்வேயில் டிராலி மேனாக வேலை பார்த்து வருகிறார்.

    செந்தில்குமாரும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். இதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் ஓட்டை பிரித்து விட்டு உள்ளே சென்றனர். பின் பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகை ரூ.15 ஆயிரம் பணம், 3½ கிலோ வெள்ளி உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி சென்று விட்டனர்.

    வேலையை முடித்து வீட்டிற்கு வந்த செந்தில் குமார் பீரோ உடைந்து கிடந்து பொருட்கள் சிதறிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம் ஆலத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 31). பெண்ணாடம் கிழக்கு ரத வீதியில் சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடிந்தபின் கம்ப்யூட்டர் சென்டரை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். காலையில் கம்ப்யூட்டர் சென்டருக்கு வந்தார். அப்போது பூட்டியிருந்த கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்து மணிமாறன் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறிய நிலையில் கிடந்தது.

    கம்ப்யூட்டர் சென்டரில் இருந்த 2 லேப்-டாப்கள் 1 எல்.சி.டி. மானிட்டர் உள்ளிட்ட சுமார் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து மணிமாறன் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த ஜனவரி மாதம் ஏற்கனவே மணிமாறனின் கம்ப்யூட்டர் சென்டரில் கொள்ளை போனது. இப்போதும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் மணிமாறன் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் அச்சத்தில் உள்ளன.

    பெண்ணாடத்தில் கடந்த 2 மாதத்தில் 12-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியூருக்கு செல்வதற்கே பயப்படுகின்றனர்.

    தொடர் கொள்ளை சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×