என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது

    ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெண் கொலையில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கச்சிப்பட்டில் உள்ள முட்புதரில் கடந்த மாதம் 23-ந்தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். ஒரு மாதமாக கொலையுண்ட பெண் யார்? கொலையாளி குறித்து தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் கொலையுண்டவர் துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த வசந்தி (47) என்பது தெரிந்தது. அவரது கணவர் ராமன் சில ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டார்.

    போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்த வசந்தி ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். எனவே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

    வசந்தியிடம் ஏலச்சீட்டு கட்டியவர்கள் யார்-யார்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்தனர். அப்போது குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் வசித்து வந்த பரசுராமன் மாயமாகி இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த பரசுராமனை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் வசந்தியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து பரசுராமனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வந்தேன். ஒரு நண்பர் மூலம் வசந்தியுடன் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    நான் வசந்தியிடம் சீட்டு கட்டினேன். மேலும் ரூ. 1 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தேன். சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது சரியாக பணம் கட்ட முடியவில்லை.

    எனவே போலீசில் புகார் செய்யப் போவதாக வசந்தி கூறினார். தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்டு அவர் மிரட்டல் விடுத்தார். எனவே அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.

    கடந்த மாதம் 22-ந்தேதி ரூ.1 லட்சம் கடனை திருப்பி தருவதாக வச்நதியை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கச்சிப்பட்டிற்கு வரவழைத்தேன். அங்கு நாங்கள் உல்லாசமாக இருந்தோம்.

    பின்னர் அவர் பணத்தை கேட்டு தகராறு செய்தார். என்னிடம் பணம் இல்லாததை தெரிந்ததும் போலீசில் புகார் செய்வதாக மிரட்டினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்தியின் கழுத்தை அறுத்தேன். இதில் அவரது உயிர் போகவில்லை. எனவே சேலையால் கழுத்தை இறுக்கி கொன்றேன்.

    போலீசில் இருந்து தப்பிக்க சொந்த ஊரான திருவண்ணாமலையில் பதுங்கி இருந்தேன். போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×